அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடத்தை இடமாற்றம் செய்ய தடை.. அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை : கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடத்தை இடமாற்றம் செய்யக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேராசிரியர் மனோன்மணி என்பவர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்., நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் குழு 160 பக்கங்கள் அடங்கிய ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது.
பின்னர், அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடத்தை இடமாற்றம் செய்யக் கூடாதென்றும், இது தொடர்பாக 2011 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசாணையை ரத்து செய்வதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த காலத்தில் நூலகம் அமைக்கப்பட்டபோது, எந்த நிலையில் பராமரிக்கப்பட்டதோ அதேநிலையில் தொடர்ந்து நல்ல முறையில் பராமரித்திட வேண்டும் என்றும், நூலகத்தின் செயல்பாடுகளை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டு, நூலகத்தை ஆய்வு செய்த நீதிமன்ற ஆணையாளர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்மீது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர்-15 அன்று, தமிழக அரசு அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், நூலகத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென்றும், ஊழியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டு இது தொடர்பான வழக்குகளை முடித்து வைப்பதாகத் தெரிவித்தனர்.