2011ல் கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும்- 6 ஆண்டுகளுக்குப் பின் ஹைகோர்ட் தீர்ப்பு
2011 சட்டசபை தேர்தலில் கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை: 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011 தேர்தலில் ஸ்டாலின் 68,677 வாக்குகளும், துரைசாமி 65,943 வாக்குகளும் பெற்றனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஸ்டாலின் வென்றதாக சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியி்ட்ட சைதை துரைசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 6 ஆண்டுகாலமாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக மு.க.ஸ்டாலினும், சைதை துரைசாமியும் பலமுறை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். இந்த வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியும் நேரில் ஆஜராகி,கொளத்தூர் தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் மு.க.ஸ்டாலின் தரப்பில் செய்யப்பட்ட தேர்தல் செலவு கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்தார்.
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கு தீர்ப்பளிக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2016 சட்டசபைத் தேர்தலிலும் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications