கன்னியாகுமரி டூ சென்னைக்கு சுற்றுலா கப்பல் போக்குவரத்து... ராமேஸ்வரம், வேளாங்கண்ணியை இணைத்து!
நாகர்கோவில்: கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு சுற்றுலாக் கப்பல் போக்குவரத்துத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தில் ராமேஸ்வரம், வேளாங்கண்ணி ஆகியவை இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரிக்கு வந்திருந்த அமைச்சர் மகேஷ் சர்மா அங்கு பல்வேறு திட்டங்கள் தொடர்பான ஆய்வுப் பணிகளை பார்வையிட்டார். அவருடன் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளி்ட்டோரும் வந்திருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியின் மேம்பாடு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. இதுகுறித்து ஆராயப்படும்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் அமைக்க வேண்டும் என்பது அதில் ஒரு கோரிக்கை. அது நிச்சயம் பரிசீலிக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.
கடற்கரை சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தமிழகத்திலும் அது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக ரூ. 170 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கன்னியாகுமரி முதல் சென்னை வரை சுற்றுலா கப்பல் போக்குவரத்தை தொடங்குவது குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதுதொடர்பான செயல் திட்ட ஆய்வு முடிந்துள்ளது. விரைவில் இது அமல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் ராமேஸ்வரம், வேளாங்கண்ணி ஆகியவையும் இணைக்கப்படும்.
கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை சிறப்பு கேஸாக எடுத்துக் கொண்டு பரிசீலிக்கப்படும். தற்போது மிகச் சமீபமாக ஒரு விமான நிலையம் உள்ளதால் சட்டப்படியும், கொள்கைப்படியும் கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைப்பது கடினம்தான். இருப்பினும் சிறப்பு விவகாரமாக இது கருதப்பட்டு பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications