மதிமுகவில் அதிரடி மாற்றம் சென்னை மாவட்டம் மூன்றாக பிரிப்பு – புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ள நிலையில் மதிமுக நிர்வாக வசதிக்காக சென்னை மாவட்டத்தை மூன்றாக பிரித்துள்ளது. சு.ஜீவன் வடசென்னை, வேளச்சேரி மணிமாறன் தென்சென்னை, ரெட் சன் அம்பிகாபதி மத்தியசென்னை மாவட்டசெயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.. தர்மபுரி மாவட்ட செயலாளர் சம்பத் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அ.அசோகன் மாவட்ட பொருப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
கழக நிர்வாக வசதிக்காக சென்னை மாவட்டம் - வடசென்னை மாவட்டம், தென்சென்னை மாவட்டம், மத்திய சென்னை மாவட்டம் என மூன்று மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை மாவட்டக் கழகத்தில் ராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் ஆகிய பகுதிக் கழகங்களும், அவற்றுக்கு உட்பட்ட வட்டக் கழகங்களும் அடங்கும்.
தென்சென்னை மாவட்டக் கழகத்தில் தியாகராய நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய பகுதிக் கழகங்களும், அவற்றுக்கு உட்பட்ட வட்டக் கழகங்களும் அடங்கும்.
மத்திய சென்னை மாவட்டக் கழகத்தில் அண்ணா நகர், ஆயிரம்விளக்கு, வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிக் கழகங்களும் அவற்றுக்கு உட்பட்ட வட்டக் கழகங்களும் அடங்கும். வடசென்னை மாவட்டக் கழகச் செயலாளர் சு.ஜீவன் மற்றும் வடசென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அந்தந்த பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றுவார்கள்.
தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் வேளச்சேரி பி.மணிமாறன் மற்றும் தென்சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில்
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அந்தந்த பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றுவார்கள்.
மத்திய சென்னை மாவட்டப் பொறுப்பாளராக ரெட்சன் சி.அம்பிகாபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்சென்னை மாவட்டத்தைச் சார்ந்த தியாகராய நகர் பகுதி பொறுப்பாளர் பீடா ரவி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தியாகராய நகர் பகுதி கழகப் பொறுப்பாளராக சி.பி.வேலு நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியினர் மேற்குறிப்பிட்டவாறு நியமிக்கப்பட்டுள்ள தென்சென்னை மாவட்டம் - தியாகராய நகர் பகுதிக் கழகப் பொறுப்பாளர் வேலுவுடன் தொடர்பு கொண்டு கழக பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்
தருமபுரி மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து வி.எஸ்.சம்பத் விடுவிக்கப்பட்டு, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட பொறுப்பாளராக அ.அசோகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அந்தந்த பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்றும் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications