சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான விபத்து.. தலையில் கம்பி பாய்ந்து சாப்ட்வேர் இன்ஜினியர் சாவு!
சென்னை: மெட்ரோ ரயில் பணியின்போது கம்பி பாய்ந்து பைக்கில் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரங்கிமலை பகுதியில் நடந்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. பரங்கிமலை, ஜிஎஸ்டி சாலை பகுதியில் கிண்டி-ஆலந்தூர் மார்க்கத்திலும், இன்று வழக்கம்போல மெட்ரோ பணிகள் நடந்தபோது கம்பி திடீரென சரிந்தது. அப்போது, பைக்கில் அந்த வழியாக சென்ற மடிப்பாக்கத்தை சேர்ந்த கிரிதர் (32) தலையில் கம்பி ராட் சென்று அடித்தது.

அந்த கம்பி 6 அடி நீளம், 50 கிலோ எடை கொண்டதாகும். இந்த கோர விபத்தில், ஹெல்மெட்டையும் உடைத்து தலையில் கம்பி பலமாக அடித்தது. எனவே ரத்த வெள்ளத்தின் நடுவே கிரிதர் துடிதுடித்து விழுந்தார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர், ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கிரிதரை அனுப்பியுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே கிரிதர் பரிதாபமாக உயிரிழந்தார். கிரிதர் ஐடி கார்டை வைத்து, அவரது குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். குரோம்பேட்டை மருத்துவமனையில் குவிந்த குடும்பத்தார் கதறி அழுதனர். கிரிதர் சாப்ட்வேர் இன்ஜினியர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் வடபழனிக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த விபத்தை தொடர்ந்து ஜி.எஸ்.டி சாலையில் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறை இணை ஆணையர் அருண் சம்பவ இடத்தில் பரிசீலனை செய்தார்.
காலையில் அலுவலகம் நோக்கி சென்ற ஒரு அப்பாவி, மெட்ரோ ரயில் பணியாளர்கள் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளார். வேலை நடைபெறும் பகுதியில், சுற்றிலும் வலை கட்ட வேண்டியது அவசியம். ஆனால், இங்கு விதிமுறை மீறப்பட்டு, வலை கட்டாமலே வேலை நடந்துள்ளது. இதுகுறித்து பரங்கிமலை போலீசார் இந்திய தண்டனை சட்டம் 304ன்கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கிரிதர் மீது விழுந்த இரும்பு கம்பி, அருகே பைக்கில் நின்ற மன்சூர் என்பவர் மீதும் விழுந்துள்ளது. ஆனால், அதிருஷ்டவசமாக அவர் லேசான காயத்துடன் தப்பிவிட்டார்.












Click it and Unblock the Notifications