கனமழையால் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் கடும் பாதிப்பு ! பெரும் நஷ்டம் !
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையின் காரணமாக மெட்ரோ ரயில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1 மாதமாக கொட்டித் தீர்த்த கனமழைக்கு சென்னை நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. இதுவரை கண்டிராத அளவில் வரலாறு காணாத அளவில் வெளுத்து வாங்கியது. தொடர்ந்து பெய்த கனமழைக்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தொழிற்சாலைகள், அலுவலகங்கள், ரயில் தண்டவாளம், விமான நிலையம், பஸ் டெப்போ, கோயில் என ஒட்டு மொத்த இடங்களிலும் வெள்ளநீர் புகுந்தது.

இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையால், மெட்ரோ ரயில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உபகரணங்களும் மழை நீரில் மூழ்கியுள்ளதால், சுமார் ஒன்றரை மாத காலம் மெட்ரோ ரயில் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
கடந்த 1ம் தேதி சென்னை புரட்டி போட்ட கனமழையால் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. சென்னை நகரையே திக்கு முக்காட வைத்த இந்த வெள்ளப்பெருக்கில் இருந்து மெட்ரோ ரயில் பணிகளும் தப்பவில்லை.
சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் போன்ற பகுதிகளில், சுரங்கப் பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வந்த இடங்களில் தற்போது அதிகளவில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால், சுரங்கப் பகுதியில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உபகரணங்களும் முற்றிலுமாக நாசமாகி விட்டன. இதனால் ஏற்பட்ட இழப்பு ஒருபுறம் என்றால், அடுத்த 45 நாட்கள் வரை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications