சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்...வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் அமல்...
சென்னை : ஆலந்தூர் - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயிலின் சேவைக்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது..
கோயம்பேடு - ஆலந்துார் இடையே, தினமும் காலை, 6:00 மணி மற்றும், ஆலந்துார் - கோயம்பேடு இடையே, காலை, 6:03 மணி முதல், மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இனி, ஞாயிற்று கிழமைகளில், இரு மார்க்கங்களிலும், காலை 8:00 மணி முதல் ரயில் புறப்பட்டு செல்லும் வகையில், நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இயக்கம் மற்றும் பராமரிப்பு காரணங்களுக்காக, இந்த நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், ஞாயிற்று கிழமை பலருக்கும் விடுமுறை தினம் என்பதால், காலை, 8:00 மணிக்கு சேவை துவக்கப்படுகிறது.
இதே போன்று, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைசி மெட்ரோ ரயில் சேவை ஆலந்தூர், கோயம்பேட்டில் இருந்து இரவு 10 மணிக்கு இயக்கப்படும். இந்த சேவை நேர மாற்றம் அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை தொடரும்.
இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.