இங்கெல்லாம் மழை நீரை அகற்றியதாமே குடிநீர் வடிகால் வாரியம்.. மெய்யாலுமா?
சென்னை: சென்னையைப் புரட்டிப் போட்ட கன மழை சமயத்தில் சென்னை நகரில் எங்கெல்லாம் தேங்கிக் கிடந்த மழைநீர் வெள்ளத்தை அகற்றினோம் என்பது குறித்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம்.
இதுதொடர்பாக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர் சந்திரமோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் உங்களது ஏரியா இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் சந்தோஷப்படுங்கள்.. இல்லாவிட்டால் குடிநீர் வடிகால் வாரியத்தை ஒரு பிடி பிடியுங்கள்.
வாங்க, வடிகால் வாரியத்தின் பட்டியலைப் பார்க்கலாம்..

திருவொற்றியூர்
திருவொற்றியூரில் பெரிய குப்பம், சின்ன குப்பம், ராமநாதபுரம், ஜெ.ஜெ.நகர், அன்னை சிவகாமி நகர், கே.வி.குப்பம், சின்ன எர்ணாவூர், சத்தியா மூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பம்பு செட்டு மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு சுமார் 4,800 குடும்பங்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

மணலி
மணலி பகுதியில் புழல் ஏரி உபரிநீர் கால்வாய் கரையை ஜே.சி.பி., உதவியை கொண்டு சென்னை மாநகராட்சி பலப்படுத்தியதாலும் இந்த பகுதிகளில் உள்ள கால்வாய்களை சரிசெய்து பம்பு செட்டு மூலம் மழைநீரை வெளியேற்றியதினால் ஜெ.ஜெ. நகர், ஜாகீர் உசேன் நகர், நியூ எம்.ஜி.ஆர். நகர், சி.பி.சி.எல் நகர், அருளானந்தம் நகர், அரிகிருஷ்ணன் நகர், தில்லைபுரம், எல்லைபுரம், லப்பைமேடு முதலிய இடங்களில் வசிக்கும் 2,500 குடும்பங்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.

வளசரவாக்கம்
வளசரவாக்கத்தில் உள்ள லட்சுமி நகர் விரிவாக்கம், அன்பு நகர், புவனேஸ்வரி நகர், கணேஷ் கல்யாண அவென்யூ நகர், ஸ்டெர்லிங் அவென்யூ ஆகிய பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தேங்கி இருந்த மழைநீரை அதிகத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் மூலம் முற்றிலுமாக வடிக்கப்பட்டு அங்கு வாழும் பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

மடிப்பாக்கம்
பெருங்குடியில் உள்ள மடிப்பாக்கம், ராம் நகர், வேளச்சேரி-தாம்பரம் மெயின் ரோடு, செல்வ கணபதி அவென்யூ, சரவண நகர் ஆகிய பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு சுமார் 5,000 குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுமார் 1,000 வீடுகளில் நீர் புகுந்து இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால் அவர்களை அருகாமையிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

போர்க்கால அடிப்படையில்
கடந்த 5 தினங்களாக சென்னை மாநகராட்சியின் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் ஜே.சி.பி., பம்புகள் கொண்டு ழுழுமையாக அப்பகுதியில் சூழ்ந்திருந்த மழைநீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து இன்று அனைத்து குடும்பங்களும் தங்களின் இருப்பிடத்திற்கு சென்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

அணை ஏரி உடைப்பு
மண்டலம்-14-ல் அமைந்துள்ள அணை ஏரியில் 18.11.2015 அன்று இரவு 11 மணியளவில் உடைப்பு ஏற்பட்டு மாநகராட்சி அலுவலர்கள் மீட்பு குழுவுடன் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்குள் மேற்கண்ட அடைப்பு சரிசெய்யப்பட்டது. தவறியிருப்பின் இந்த நீர் நாராயணபுரம் ஏரிக்கு சென்று அங்கு ஏற்கனவே பாதிப்படைந்த ராஜேஷ் நகர் பகுதியில் நீர்புகுந்து அப்பகுதியில் வாழ்ந்து வரும் 1,500 குடும்பங்கள் ஆபத்திற்குள்ளாகி இருப்பார்கள். மேலும் வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications