'குட் ஜாப், கீப் இட் அப்': சென்னை பாஸ்போர்ட் ஆபீஸை பாராட்டிய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
சென்னை: 2014-2015ம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றியதற்காக சென்னையில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தை பாராட்டி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சான்றிதழ் அளித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தின் கிளைகள் போன்று சாலிகிராமம், அமைந்தகரை மற்றும் தாம்பரத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 2014-2015ம் ஆண்டில் பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் சிறப்பாக செயல்பட்டதை பாராட்டி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இது குறித்து பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி பாலமுருகன் கூறுகையில்,
சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் நடப்பாண்டில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 892 விண்ணப்பங்களை ஏற்று செயல்பட்டுள்ளன.
2014-2015ம் ஆண்டில் தமிழகத்தில் 9.49 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தினமும் 9 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இருந்து 2 ஆயிரத்து 550 விண்ணப்பங்கள் வருகின்றது. காரைக்கால், விழுப்புரம், புதுவை மக்களுக்காக புதுவையில் வரும் செப்டம்பர் மாதம் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையம் துவங்கப்பட உள்ளது.
ஹஜ் யாத்ரீகர்களுக்காக கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 600 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் அடிக்கடி மெயின் அலுவலகத்திற்கு அலையாமல் இருக்க ராயலா டவர்ஸில் உள்ள பிராந்திய அலுவலகத்தில் சிறப்பு செல் துவங்கப்பட்டுள்ளது. அங்கு போன் செய்து தங்களின் விண்ணப்பம் பற்றி மக்கள் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த ஆண்டு மட்டும் 150 பேர் போலி ஆவணங்கள் அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications