Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தண்ணீரே இல்லை.. மக்கள் எங்கய்யா போவார்கள்.. கவலையே இல்லையா அரசுக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடிநீருக்காக அல்லாடுவதே இன்றைக்கு மிக முக்கிய பிரச்சினையாகிவிட்டது. மயிலாப்பூரில் தண்ணீர் தட்டுப்பாடு என்றால் யாரும் நம்பமாட்டார்கள். தினந்தோறும் தண்ணீர் வந்த காலம்மாறி ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வந்தது. இப்போதோ தண்ணீர் எப்போது வரும் என்று கார்ப்பரேசன் குழாய்களை ஏக்கத்தோடு பார்க்கும் நிலைக்கு வந்து விட்டனர் மயிலாப்பூர்வாசிகள்.

காலையில் எழுந்த உடனே அக்கம் பக்கத்தினரைப் பார்த்து எங்கேயாவது தண்ணீர் வருதா? என்ற விசாரணைதான் ஆரம்பமாகிறது. முகம் பார்த்து பேசாத நபர்களைப் பார்த்துக் கூட சிநேகமாய் சிரித்து, தண்ணீர் எந்த தெருவில வருது. நல்லா வருதா? கூட்டமா இருக்கா என்று விசாரிக்கும் நிலைதான் இப்போது ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையிலும் சென்னையில் குடிநீர் பிரச்சினையே இல்லையே என்று மாநகராட்சிக்கூட்டத்தில் பேசிய மேயர் பேசியுள்ளதைப் பேப்பரில் படித்து சிரிப்பதா? அழுவதா அல்லது தெருவாசிகளை அழைத்துக்கொண்டு போய் போராட்டம் நடத்துவதா என்று யோசிக்க வைக்கிறது.

இன்றைக்கு போராட்டம் வேண்டாம். ஏனெனில் இன்றைக்கு பூராவும் டாஸ்மாக் போராட்டமாக இருக்கும். ஊடகங்களில் செய்தியாகாது. நாளைக்கு போராடுவோம், எல்லா டிவி காரங்களுக்கும் சொல்லிருங்க என்ன என்று பேசி வைத்து விட்டு வந்த பத்தாவது நிமிடத்தில் எங்கிருந்தோ ஒரு தகவல் வந்தது மெயின் ரோட்டுல தண்ணீ வருதாம்... அதைக் கேட்டதுதான் தாமதாம். ஆள் ஆளுக்கு குடத்தை எடுத்துக்கொண்டு போய் தண்ணீர் பிடிக்க ஆரம்பித்து விட்டனர். இன்றைக்கு பொழுது எப்படியோ ஓடிவிடும்.அப்போ நாளைக்கு காலையில... தண்ணீர் எங்கே வருது என்று மறுபடியும் விசாரிக்க வேண்டியதுதான். இந்த நிலை எத்தனை நாளைக்கோ தெரியலையே?

தண்ணீரும் பாலும்

தண்ணீரும் பாலும்

மெட்ரோ தண்ணீர் குடித்து பழகியவர்களுக்கு கேன் தண்ணீர் குடிக்க முடியவில்லை. 20 லிட்டர் கேன் தண்ணீரின் விலை 40 ரூபாய் என்பது ஒரு பக்கம் இருக்க தினசரி காலையில் பாலுக்கு 40 ரூபாயும், தண்ணீருக்கு 40 ரூபாயும் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர் சென்னைவாசிகள்.

சுகாதாரமற்ற தண்ணீர்

சுகாதாரமற்ற தண்ணீர்

தண்ணீர் பற்றாக் குறை விஸ்வரூபம் எடுத்துள்ள பகுதிகளில் ஆங்காங்கே மக்கள் காலிக் குடங்களுடன் சாலைகளில் பயணிப்பதும் காத்திருப்பதும், நெடுநேரமாகி வரும் தண்ணீர் லாரிகளை மொய்ப்பதும் அன்றாட அவலமாகியிருக்கிறது. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஆகிய பகுதிகளில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் வயிற்றுப் போக்கு பாதிப்பால் பொதுமக்கள் அவதியுறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள கொடுமையும் நிகழ்ந்து வருகிறது

2004ல் சந்தித்த பிரச்சினை

2004ல் சந்தித்த பிரச்சினை

கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டை சென்னை மாநகரம் எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2002 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர்த் தட்டுப்பாடு கடுமையாக இருந்தது. மக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக பல மணிநேரம் தெருக்களில் காத்துக் கிடந்தனர்.

சாலை மறியல் போராட்டங்கள்

சாலை மறியல் போராட்டங்கள்

லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து தெருக்களில் வைக்கப்பட்டிருக்கும் சின்டெக்ஸ் டேங்குகளில் ஊற்றுவார்கள். அதை காசு கொடுத்து வாங்க வேண்டும். அந்த காசை வசூலிக்க ஒரு தாதா வேறு அமர்ந்து கொண்டு இருப்பார். மீண்டும் அதே போன்றதொரு நிலை வருமோ? என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

12 ஆண்டுகளுக்குப் பின்னர்

12 ஆண்டுகளுக்குப் பின்னர்

2004ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பல இடங்களில் சாலை மறியலும் போராட்டங்களும் அப்போது அன்றாட செய்திகளாக இருந்தன. அதே நிலை இன்னும் சிலவாரங்களில் மீண்டும் சென்னையின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதற்குக் காரணம் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி நீர்த் தேக்கம், சோழவரம் ஏரி, செங்குன்றம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, போரூர் ஏரி ஆகியவை கிட்டத்தட்ட வறண்டுவிட்டன.

விவசாய கிணறுகளின் தண்ணீர்

விவசாய கிணறுகளின் தண்ணீர்

சென்னையைச் சுற்றியிருக்கும் பூந்தமல்லி, திருப்போரூர், பஞ்செட்டி மற்றும் ஆரணியாறு, கொசஸ்தலையாறு ஆகிய பகுதிகளில் இருந்து விவசாய கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னை நகருக்குள் விநியோகம் நடந்து வருகிறது. 70 லட்சம் பேர் கொண்ட சென்னை மாநகருக்கு நாள்தோறும் 1,000 மில்லியன் நீர் மட்டுமே குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படுகிறது.

கழிவு நீர் கலந்த நீர்

கழிவு நீர் கலந்த நீர்

தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள இடங்களில் லாரிகளில் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் சுத்தமாக இல்லாமல் கலங்கலாக இருப்பதும்,சாக்கடை வாடையுடன் வழங்கப்படுவதும் தொடர் கதையாக இருக்கிறது என்பது குற்றச்சாட்டாகும். இந்த தண்ணீரைக்குடித்த மக்கள் மைலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 க்கும் மேற்பட்டோர் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கலங்கலான தண்ணீர்

கலங்கலான தண்ணீர்

இதே போல சென்னை தரமணி பகுதியில் சரிவர குடிநீர் விநியோகம் இல்லை என்றும், வண்டல் மண் கலந்த தண்ணீர் விநியோகமே நீடிக்கிறது என்றும் புகார் எழுந்துள்ளது. இங்கு குடிநீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனையடுத்து அன்றாடத் தேவைகளுக்காக பணம் கொடுத்து லாரிகளில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பொய்த்துப்போன வானம்

பொய்த்துப்போன வானம்

இந்த ஆண்டு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பருவமழையும் போதிய அளவிற்குப் பெய்யவில்லை. சராசரியாக ஆண்டொன்றுக்கு 140 செ.மீ. மழை சென்னையில் பெய்யவேண்டும். அப்போதுதான் மக்கள் நெருக்கடி மிகுந்த சென்னை மாநகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு வராது. ஆனால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் மழை போதிய அளவிற்கு பெய்யாமல் வானம் பொய்த்து விட்டது.

மக்கள் பிரச்சினை தெரியுமா?

மக்கள் பிரச்சினை தெரியுமா?

குடிக்க தண்ணீர் கேட்டால் புதிது புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்க ஆலோசித்து வருகிறது அரசு. அரசுக்கு ஆயிரம் கவலைகள் இருக்கலாம். ஆள்பவர்களுக்கு பல ஆயிரம் கவலைகள் இருக்கலாம். அதற்காக அமைச்சர்கள் கோவில் கோவிலாக ஏறி இறங்கலாம். ஆனால் தண்ணீர் இன்றி தவிக்க வைக்கும் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க எதுவுமே செய்யாத அரசை என்றைக்கும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பது மட்டும் உண்மை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+