வெங்கடேச பண்ணையாரின் 'வலதுகரம்..' 'தாத்தா' செந்தில் சென்னையில் கைது!
சென்னை: வெங்கடேச பண்ணையாருக்கு நெருக்கமான பிரபல ரவுடி தாத்தா செந்தில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் தாலுகா, ஒசரவிளை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் என்கிற செந்தில்குமார் என்கிற ‘தாத்தா' செந்தில் (55). வயதான தோற்றத்தில் இருப்பதால் அவருக்கு தாத்தா செந்தில் என்ற பெயர் வந்ததாம்.
பிரபல ரவுடியான இவர், 2011-ம் ஆண்டு நடந்த வனத்துறை அலுவலர் ஆறுமுகம் மற்றும் அவர் மனைவி யோகேஷ்வரி ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட, இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகும். இவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அண்ணாநகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் காரில் வழக்கறிஞர் என்ற ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு செந்தில் சுற்றி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸார், தலைமறைவாக இருந்த ‘தாத்தா' செந்திலை கைது செய்தனர். அவரிடம் இருந்து கார், பட்டா கத்தி போன்றவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
செந்தில் மீது 9 கொலை வழக்குகள் பதிவாகின. அதில் பல வழக்குகளில் சாட்சியங்கள் இல்லாமல் விடுதலையானவர் செந்தில். 2 வழக்குகள் நிலுவையிலுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேச பண்ணையாரின் வலது கரம் போல செயல்பட்டவர் செந்தில்.
பண்ணையாரின் தந்தை மற்றும் தாத்தாவை கொலை செய்த பகீரதன் என்பவரை போட்டுத்தள்ளியதும் செந்தில்தான் என்கிறது போலீஸ். 1994ம் ஆண்டு சாமுவேல் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும், 1995ல் பசுபதி பாண்டியனின் உறவுக்காரர் ராஜகோபால், 2006ல் பசுபதி பாண்டியன் மனைவி ஜெசிந்தா கொலை வழக்குகளிலும் செந்திலுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.
எதிரிகளை உடல் அளவில் டார்ச்சர் செய்து, தங்கள் பக்கம் வரவிடாமல் செய்வதில் செந்திலை நிபுணர் என்கிறார்கள். சென்னையில் ரியல் எஸ்டேட் கட்டப்பஞ்சாயத்துகளில் தாத்தா செந்தில் ஈடுபட்டுவந்ததாக அம்பத்தூர் போலீசார் தெரிவிக்கின்றனர்.