ஜெ. உடல்நிலை பற்றி சோஷியல் மீடியாக்களில் வதந்தி.. சாப்ட்வேர் இன்ஜினியர் உட்பட 2 பேர் அதிரடி கைது
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக, வதந்தி பரப்பி வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல் நிலை குறித்து, பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக வதந்திகள் தீவிரமாக பரப்பப்பட்டன.
இதுகுறித்து, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன், வடக்கு சென்னை, துணை செயலாளர் ராஜ்கமல் ஆகியோர் சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்திருந்தனர். இதன்பேரில் போலீசார் 43 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், வதந்தி பரப்பிய மென் பொறியாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல்லை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சதீஷ் மற்றும் மதுரையை சேர்ந்த மாடசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களாகும். இவர்கள் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.