சென்னையில் மீண்டும் மழை தொடங்கியது: நிலைமை எப்போது சீராகும்? - கவலையில் மக்கள்
சென்னை: காலையில் லேசாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. மழை பெய்வதால் வெள்ளம் வடிவதிலும், மீட்புப்பணியிலும் சிக்கல் எழுந்துள்ளது
சென்னையில் எங்கு பார்த்தாலும் வெள்ளநீர், பல அடி உயரத்திற்கு தேங்கி உள்ளது. ஆனால், குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர் சென்னைவாசிகள்.
நகரத்தில் 48 மணிநேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லை. அதனால் போக்குவரத்து தகவல் தொடர்பு எல்லாம் பாதிக்கப்பட்டு உள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மீட்பு பணிக்கு ராணுவம் மற்றும் விமானப்படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 110 மோட்டர் படகுகளுடன் 30 குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கானோர் உணவின்றி குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர்

62000 பேர் மீட்பு
சென்னை மாநகராட்சி சார்பில் 92 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 9லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. சென்னை வெள்ளத்தில் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவித்த 62 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மிரட்டும் வானிலை அறிக்கை
தமிழகத்தில் அடுத்த, 72 மணி நேரத்துக்கு கனமழை தொடரும். இதில், இரண்டு நாட்களுக்கு அதாவது, 48 மணி நேரம் மிக கன மழை பெய்யும். இதனால் நிலைமை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகலாம்' என, இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழக அரசை எச்சரித்துள்ளது.

மீண்டும் மழை
ஏற்கனவே கடந்த மூன்றுநாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால், மாநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், லேசாக விட்ட மழை மீண்டும் மழை தொடங்கியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு அதாவது, 48 மணி நேரத்துக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை நீடிப்பதால், நிலைமை மோசமாக இருக்கும்.

89 சதவிகிதம் கூடுதல் மழை
தமிழகத்தில், ஒரு ஆண்டில் பெய்யும் மழையில், 48 செ.மீ., மழை, வட கிழக்கு பருவ மழை மூலம் கிடைக்கும். இதில், தமிழக கடலோர மாவட்டங்களில், 60 சதவீதம், பிற மாவட்டங்களில், 40 - 50 சதவீத மழை பெய்யும். ஆனால், தற்போது சராசரிக்கும் கூடுதலாக, 50 சதவீத மழை பெய்துள்ளது. சென்னையில், சராசரியை விட, 89 சதவீத மழை அதிகமாக பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலைமை எப்போது சீராகும்?
மழை நின்றாலும் ஏரிகளில் இருந்து திறந்து விடப்படும் வெள்ளநீர் நகரை முற்றிலும் கபலீகரம் செய்துள்ளது. இதனால் நிலையை சீரடைய ஒரு வாரத்திற்கு மேலாகும் என்பதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். இந்த நிலையில் மழை மீண்டும் மிரட்டத்தொடங்கியுள்ளதால் மீட்புப்பணிகளில் சிக்கல் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications