நரகமான சென்னை நகரமக்களின் வாழ்க்கை.... சாலைகள், வாகனங்களில் தஞ்சம்
சென்னை: ஒரேநாள் இரவில் பெய்த பேய்மழை சென்னை நகரவாசிகளின் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விட்டது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்தவர்களும், ஆற்றங்கரையோரம் வசித்த மக்களும், தங்களில் இருப்பிடத்தை துறந்து நிவாரணமுகாம்களிலும், ஆங்காங்கே கிடைத்த இடங்களில் தங்கி, உறக்கமின்றி தவித்து வருகின்றனர்.
மழை குறைந்து, ஆங்காங்கே வெள்ள நீர் வடிந்து வந்தாலும் , மக்கள் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

பல ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கியுள்ள நிலையில், உயிர் ஒன்றைத்தவிர தங்களிடம் இருந்த அனைத்து பொருட்களை இழந்துள்ள ஆற்றங்கரையோர மக்கள் தங்க இடமின்றியும், உண்ண உணவின்றியும் தவிக்கும் நிலை இன்றும் தொடர்கிறது.
பரிதாப நிலையில் மக்கள்
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் சென்னை நகரத்தின் பல பகுதிகளிலும் அனைத்தையும் இழந்து நிற்கதியாக நிற்கின்றனர் மக்கள். குறிப்பாக கூவம், அடையாறு ஆற்றங்கரையோரங்களில் வசித்து வந்த குடிசைவாசிகளின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது.
சாலைகளில் தஞ்சம்
வீடுகளை இழந்து, உடைமைகளையும் உடைகளையும் இழந்து அடுத்தது என்ன செய்வது? எங்கு செல்வது ?என அறியாமல் நிற்கும் இவர்கள் முகாம்களிலும் தங்க இடமில்லாமல் சாலையோரங்களில் தங்கியுள்ளனர்.
இருப்பிடங்களான வாகனங்கள்
இடமில்லாமல் தவித்த இந்த மக்களுக்கு ஆட்டோக்களும் சரக்கு வாகனங்களும் புதிய இருப்பிடமாக மாறி இருக்கின்றன. தங்குமிடத்தை தாங்களே ஏற்படுத்திக் கொண்டாலும் உணவு குடிநீர் இல்லாமல் அன்றாட வாழ்க்கையையே நரகமாகி இருப்பதாக ஆதங்கப்படுகின்றனர் இந்த மக்கள்.
நிவாரணம் கிடைக்கலையே
லாரி லாரியாக நிவாரணப்பொருட்கள் வந்தாலும் பெரும்பாலானவர்களை அது சென்று சேர்வதில்லை. அரசு சார்பாக எவ்வித உதவியும் கிடைக்கவில்லை என்பது பெரும்பாலான மக்களின் குற்றச்சாட்டு.
ஆட்டோக்களில் வாழ்க்கை
அமைந்தகரையில் கரையோரம் வசித்து வந்த மக்களின் நிலைமையும் இது தான். அனைத்தையும் இழந்துள்ள இந்த மக்களும் கடந்த சில தினங்களாகவே ஆட்டோக்களில் தான் வாழ்க்கை நடத்துகின்றனர்.
அடையாறு ஆற்றங்கரைவாசிகள்
சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்தின் இருபுறமும் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் பெருமளவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து பெருமளவு குறைந்துள்ள போதும் மக்கள் இன்னும் தங்களது வீடுகளை புரனமைக்க முடியாத நிலையில் உள்ளனர்.
7 நாட்களாக கரண்ட் கட்
சென்னையில் பெரும்பாலான இடங்களில் 7 நாட்களுக்கும் மேலாக மின்சார சப்ளை இல்லாததால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல இடங்களில் வெ ள்ள நீர் வடிந்தும் மின்சாரம் வழங்கவில்லை எனவும், பல இடங்களில் வெள்ள நீர் வடிவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இருளில் வாழ்க்கை
சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின்வசதி சீர்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று தமிழக அரசு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அதிக அளவில் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நகர், சூளைப் பள்ளம், அமைந்தகரை எம்.எம்.காலனி, பி.பி.தோட்டம், அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் இன்னும் சீரடையவில்லை. இதனால் இரவு நேரங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகள் இருளில் மூழ்கி காணப்படுகிறது.
மிரட்டும் மழை
மழையால் வீடுகளை விட்டு வெளியேறி தவிக்கும் மக்கள், போதிய உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். ஏராளமானோர் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவ்வப்போது பெய்யும் மழை பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. முழுமையான இழப்பீடு வழங்கி தங்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக இருக்கிறது












Click it and Unblock the Notifications