சென்னை பெரு வெள்ளத்தில் பேருந்தை செலுத்தும் இந்த டிரைவருக்கு ஒரு சல்யூட்
சென்னை: சாதாரண வெள்ளத்தில் செல்லவே யோசிக்கும் பேருந்து ஓட்டுநர்கள் மத்தியில் காட்டாற்று வெள்ளம் பெருகிய சாலையில் அரசு பேருந்தை அசால்டாக செலுத்தி வந்தார் இந்த டிரைவர். பேருந்தின் மேற்கூரையிலும், பேருந்திற்கு உள்ளேயும் நூற்றுக்கணக்கான பயணிகள் இருந்தனர் என்பதுதான் இதில் கூடுதல் சிறப்பு
தாம்பரம் பகுதியில் விடாமல் கொட்டிய மழையால் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
முடிச்சூர் ஊராட்சி லட்சுமிபுரம், பெரியார் நகர் பகுதிகளில் சூழந்துள்ள வெள்ளத்தில் சிக்கியவர்கள் அனைவரும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.பெருங்களத்தூர் பேரூராட்சி பாரதிநகர், கண்ணன் அவென்யூ, அரசன் நகர், மூகாம்பிகைநகர் மற்றும் அனகாபுத்தூர், பம்மல், திருமுடிவாக்கம், திருநீர்மலை, கவுல்பஜார் பகுதிகளில் வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்கி பரிதவித்து வருகின்றனர்.
எப்படியே நீச்சலடித்து வீட்டை விட்டு வெளியேறியவர்கள் பேருந்துகள் கிடைக்குமா என்று எதிர்பார்த்து காத்திருக்க சாலையில் பெருகிய வெள்ளமோ வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது. பேருந்துகளோ, கனரக வாகனங்களோ அந்த சாலையில் செல்ல யோசித்துக் கொண்டிருந்த நிலையில் சினிமாவில் வருவது போல வெள்ளத்தில் சீறிப்பாய்ந்து கடந்தது அரசு பேருந்து ஒன்று. பேருந்து டிரைவர் அசால்டாக ஓட்டி வந்து பயணிகளை கரை சேர்த்தார். அப்போது ஏராளமானோர் உற்சாக குரல் எழுப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இந்த பேருந்தின் டிரைவர் மட்டுமல்ல சென்னை நகரில் பெரு வெள்ளத்தில் பல அரசு பேருந்து டிரைவர்கள் பேருந்தை இயக்கி மக்களுக்கு சேவை செய்தனர். ஆட்டோக்கள் கொள்ளை கட்டணம் வசூலிக்க, கால் டாக்ஸிகள் காலை வாரி விட உயிரை பணயம் வைத்து பேருந்தை இயக்கினர் பல டிரைவர்கள். அவர்கள் அனைவருக்கும் நிச்சயம் ஒரு சல்யூல் வைக்கலாம்.












Click it and Unblock the Notifications