டிசம்பர் 27, 28 தேதிகளில் சென்னையில் மீண்டும் மழை பெய்யுமாம்.. சொல்கிறது ஸ்கைமெட்
சென்னை: சென்னையில் இம்மாத இறுதியில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாக ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழையில் இந்தாண்டு வழக்கத்தை விட மிக அதிகமான மழையைப் பெற்றுள்ளது சென்னை. இம்மாத தொடக்கத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளக் காடாக மாறிப் போனது.

இதனால் கடும் பாதிப்புகளைச் சந்தித்த மக்கள், தற்போது தான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் மேலும் 2 நாட்களுக்குக் மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும், அதேசமயம், வெள்ள நிலைமை வர வாய்ப்பில்லை என்றும் தனியார் வானிலை கண்காணிப்பு மையமான ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.
வட கிழக்குப் பருவ மழைக்காலம் அக்டோபரில் தொடங்கி டிசம்பர் கடைசி வரை உள்ளது. தற்போதைய சீசன் முடிய இன்னும் சில நாட்களே உள்ளன.
இந்த நிலையில் மீண்டும் ஒரு மழை சென்னையில் பெய்யும் என்று ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது இலங்கையையொட்டியுள்ள குமரிக் கடல் பகுதியில் ஒரு மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளாவில் நல்ல மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 83 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையை இந்தப் பகுதிகளில் எதிர்பார்க்கலாம்.
அதாவது இன்று சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம். அதன் பின்னர் டிசம்பர் 26ம் தேதி வரை மழை இருக்காது, வறண்ட வானிலையே நிலவும்.
இருப்பினும் அடுத்த சில நாட்களில் தெற்கு அந்தமான் கடலில் ஒரு காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அது மேற்கு வட மேற்கு திசையில் நகரும்.
இது மேலும் வலுவடைந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறும். இதனால் டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications