மீண்டும் "வரலாறு" படைத்த சென்னை மழை.. 24 மணி நேரத்தில் 117 மி.மீ கொட்டித் தீர்த்தது!
சென்னை: சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 117 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மீனம்பாக்கம் பகுதியில் இந்த மழை அளவு பதிவாகியுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் -டிசம்பரில் கொட்டித் தீர்த்த மழையின் பாதிப்பே மக்கள் மனதை விட்டு இன்னும் அகலவில்லை. இந்த நிலையில் இன்னொரு கன மழை சென்னையை உலுக்கி வருகிறது.

நேற்று முதல் பெய்து வரும் தொடர் மழையால் சென்னையின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. கடந்த வெள்ளத்தைப் போன்ற பாதிப்பு வரவில்லை என்ற போதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது
இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 117 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் பெய்த அதிகபட்ச மழை அளவு இதுவாகும்.
திங்கள்கிழமை மட்டும் இங்கு 71 மில்லிமீட்டர் மழைப் பொழிவு இருந்தது. அதிலும் 12 மணி நேரத்தில் மட்டும் 66 மில்லிமீட்டர் மழை பெய்தது.
தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது சென்னையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு வட மேற்கில் நிலை கொண்டுள்ளது. இதனால் மழை அளவு மேலும் அதிகரித்துள்ளது.
மேலும் 2 நாட்களுக்கு சென்னையில் மழை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு நிலை மேலும் பாதிப்படையும் வாய்ப்பு உள்ளது.
மழை தொடர்ந்து, சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பும்பட்சத்தில் வெள்ளப் பெருக்குக்கு வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் மனதை விட்டு இன்னும் வெள்ள அச்சம் விலகாமலேயே உள்ளது.












Click it and Unblock the Notifications