வெள்ள பாதிப்பு மறுவாழ்வு பணிகளுக்காக... தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி அளித்த அன்புமணி
சென்னை: வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் செலவிடப்படும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் சிக்கி பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண உதவிகள் கிடைத்து வருகின்றன.

அந்தவகையில் பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ், நாடாளுமன்ற செயலக அறிவிப்பின் படி, தனது தொகுதி நிதியில் இருந்து ரூ. 1 கோடி வெள்ள நிவாரணப் பணிகளுக்காக செலவிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
''வரலாறு காணாத மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தன. ஆனால், இதை தேசிய பேரிடராக அறிவிக்க சட்டத்தில் இடமில்லை என்றும், அதனால் இதை ‘‘கடுமையான பாதிப்புகள்'' என அறிவிப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வழங்கலாம் என்று நாடாளுமன்ற செயலகம் அறிவித்திருக்கிறது. இந்த நல்லெண்ண நடவடிக்கைக்காக மத்திய அரசுக்கும் நாடாளுமன்ற செயலகத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதன்படி வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் செலவிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற பாதிப்புகள் இனியும் ஏற்படாமல் தடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், வெள்ளத் தடுப்பு பணிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். எந்தெந்த பகுதிகளில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்தாய்வு நடத்தி தீர்மானிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.''
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications