68வது சுதந்திர தினம்... சென்னையில் 200 அடி நீள தேசியக் கொடியுடன் பள்ளி மாணவர்கள் ஊர்வலம்
சென்னை: 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று சென்னையில் 200 அடி நீள தேசியக் கொடியுடன் பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
நாளை நாடுமுழுவதும் 68வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் 200 அடி தேசியக் கொடியுடன் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
சென்னை மாணவர்கள்...
நேற்று சென்னை சௌகார்பேட்டையில் உள்ள எஸ்.ஜே.டி.சுரானா ஜெயின் வித்யாலய பள்ளியைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 200 அடி நீள தேசியக் கொடியை இருபுறமும் தாங்கியபடி ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம்...
சௌகார்பேட்டையில் உள்ள வால்டாக்ஸ் சாலை, யானைக்கவுனி தெரு, தங்க சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை வழியாக இந்த ஊர்வலம் சென்றது.
விழிப்புணர்வு வாசகங்கள்...
இந்த ஊர்வலத்தின்போது "தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும்', "பெண் சிசுக் கொலையைத் தடுக்க வேண்டும், "உணவை வீணாக்கக் கூடாது',"மரம் வளர்ப்போம்- மழை பெறுவோம்' என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.
வடிவமைப்பு....
ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 200 அடி தேசியக் கொடியை எஸ்.ஜே.டி.சுரானா வித்யாலய பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் வடிவமைத்திருந்தனர்.
மற்றும் பலர்...
இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவர்களுடன் அப்பள்ளியின் தாளாளர் ஆனந்த் சுரானா, முதல்வர் உமா உள்பட பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.