10 மணி நேரமாக பற்றி எரியும் தீ.. சென்னை சில்க்ஸின் முதல் தள சுவர்கள் இடிக்கப்படுகின்றன!
சென்னை சில்க்ஸில் உள்ள தீயை அணைக்க முடியாததால் அதன் முதல் தளத்தில் உள்ள சுவர்களை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.
சென்னை: சென்னை திநகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து 10 மணி நேரமாகியும் தீயை அணைக்க முடியாததால் முதல் தளத்தில் உள்ள சுவர்களை இடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட இக்கடையில் இருந்து 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் விரைந்து தீயை அணைக்க 10 மணிநேரமாக போராடி வருகின்றனர். 15 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டுள்ளன. இத்தனை நேரம் தீ எங்கு பிடித்துள்ளது என்று கண்டறிய முடியாததால் தீயை அணைக்க வீரர்கள் திணறினர்.
7 மாடியும் எரிகிறது
தற்போது முதல் தளத்தில் தீவிபத்து நடந்துள்ளது தெரியவந்தது. கடைக்குள் இருந்து வெடிக்கும் சப்தம் தொடர்ந்து கேட்கிறது. தீ மளமளவென பரவி 7 மாடிகளுக்கும் பரவியுள்ளதால் கடையே பற்றி எரிகிறது.
உருகும் பிளாஸ்டிக்
பால்ஸ் சீலிங், சுவரை சுற்றி பிளாஸ்டிக் பொருள்களால் அலங்காரம் உள்ளிட்டவற்றால் கரும்புகை வெளியேற உடைக்கப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள் வழியாக பிளாஸ்டிக் உருகி வெளியேறுகிறது.
கரும்புகை
புகையை உறிஞ்சும் கருவிகள் மூலம் கரும்புகையை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 7 மாடிகளுக்கும் தீ பரவியதால் பெரும் விபத்து நடைபெறும் அபாயம் உள்ளதால் கடையின் முதல் தளத்தை இடிக்க வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.
யாரும் வராதீர்கள்
இதனால் தி.நகர் பகுதிக்குள் யாரும் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஒரு கட்டடத்தை சுற்றி 7 மீட்டர் அளவுக்கு இடைவெளி விட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இங்கு புறாக் கூண்டு போல் அடுத்தடுத்து கடைகள் உள்ளதால் தீயை அணைப்பது பெரும் சவாலாகவே உள்ளது. இந்த தீயணைப்பு மீட்பு விவகாரங்கள் இரவு வரை நீடிக்கலாம் என்று தெரிகிறது.