அடுக்குமாடியின் மேல்நின்று சென்னை சில்க்ஸ் தீவிபத்தை பார்க்கவேண்டாம்... போலீசார் வேண்டுகோள்!
தி சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை மக்கள் அடுக்குமாடிகளின் மீது நின்று பார்க்க வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை: தி சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தை காண மக்கள் சாரை சாரையாக திரண்டு வருகின்றனர். அதேநேரத்தில் அருகில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களின் மேல் நின்றும் குடியிருப்பு வாசிகள் தீ விபத்தை பார்த்து வருகின்றனர்.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தால் 7 அடுக்குமாடி கட்டடம் கரும்புகையை உமிழ்ந்த படி எலும்புக்கூடாய் நிற்கிறது. இந்த விபத்தில் கடையில் இருந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கடைக்குள் தீச்சுவாலைகள் காணப்படுவதால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 1000க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர கொண்டு வரப்பட்டுள்ளது.

வஜ்ரா வாகனம் மூலம்
தீ விபத்தை நேரில் காண உஸ்மான் ரோடு பகுதியில் நேற்று மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டனர். கடையின் அருகில் திரண்டவர்களை போலீசார் நேற்று வஜ்ரா வாகனம் மூலம் விரட்டியடித்தனர்.

வர வேண்டாம்..
கடையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சனை ஏற்படும் என்பதால் மக்கள் நேரில் வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

அடுக்குமாடிகளின் மேல்
இந்நிலையில் கடையின் அருகே வர முடியவில்லை என்றால் என்ன என அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் மீது ஏறி நின்று தீ விபத்தை மக்கள் ரசித்து வருகின்றனர். இதனால் செய்வதறியாது போலீசார் திகைத்துள்ளனர்.

நேரில் சென்று அறிவுரை
இதையடுத்து மக்கள் கூடியிருக்கும் பகுதிக்கு நேரில் சென்று போலீசார் கீழே இறங்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் கடை உள்ள பகுதிக்கு திரண்டுவரும் மக்கள் எலும்புக்கூடாய் போன சென்னை சில்க்ஸை போட்டோ எடுக்கவும் கடையின் முன்பு செல்பி எடுக்கவும், ஆர்வம் காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications