ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சென்னையில் மாணவர்கள் போராட்டம்… திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சென்னையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் கு.க. செல்வம் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி 19வது நாளாக நெடுவாசலில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதே போன்று சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் எம்எல்ஏக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் ரவிச்சந்திரன், கு.க. செல்வம் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர். மாணவர்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வந்திருப்பதால் போலீசார் கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.

போலீசார் எச்சரிக்கை
இந்நிலையில், அனுமதி பெறாமல் நடத்தும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என்று போலீசார் மாணவர்களை எச்சரித்தனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்தனர்.

பதற்றம்
போலீசார் சொல்வதை மீறி மாணவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் வள்ளுவர் கோட்டம் அருகில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

அடி உதை
கடந்த வாரம், இதே போன்று சென்னை கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வள்ளுவர் கோட்டம் அருகில் ஒன்று கூடி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, அவர்களை போலீசார் அடித்து உதைத்து இழுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாணவர்கள்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி வேலூர் மாவட்டம் கிடாரிப்பட்டியில் மாணவர்கள் ஒன்று கூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நெடுவாசல் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மத்திய அரசுக்கு எதிராகவும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.












Click it and Unblock the Notifications