5வது நாளாக மின்சாரம் இல்லை.. சென்னை புறநகரில் மோட்டார் பம்பு பிசினஸ் படு ஜோர்! ரூ.1000 வாடகை
சென்னை புறநகரில், அடுக்குமாடி குடியிருப்போ அல்லது தனி வீடோ, எதுவாக இருந்தாலும், தண்ணீரை உறிஞ்சி மேல் தொட்டிக்கு கொண்டு செல்ல வியாபார கும்பல் 1 மணி நேரத்திற்கு 1000 ரூபாய் வசூல் செய்கிறார்கள்.
சென்னை: வர்தா புயலுக்கு பிறகு, இன்னமும் மின்சார இணைப்பு சீர் செய்யப்படவில்லை என்பதால், சென்னை புறநகர் பகுதிகளில் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
இதை பயன்படுத்தி பல்வேறு குறுகிய கால பிசினஸ்கள் கொடி கட்டி பறக்கின்றன. அதில் ஒன்றுதான் தண்ணீர் இழுக்கும் டீசல் மோட்டார் இயந்திரம்.

சென்னை மாநகர பகுதியிலாவது மின்சாரம் அவ்வப்போது வந்து செல்கிறது. மின்சாரம் வரும் நேரத்தில் மக்கள் மோட்டார்களை ஆன் செய்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி பிறகு வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால், சென்னை புறநகர் மக்களுக்கோ தொடர்ச்சியாக மின்சார சப்ளை கிடையாது. எனவே அவர்களின் மிகப்பெரிய பிரச்சினை குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கான தண்ணீர் தட்டுப்பாடுதான்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, டீசல் மோட்டார் இயந்திரங்களுடன் சுற்றித்திரிகிறது ஒரு வியாபார கும்பல். அடுக்குமாடி குடியிருப்போ அல்லது தனி வீடோ, எதுவாக இருந்தாலும், தண்ணீரை உறிஞ்சி மேல் தொட்டிக்கு கொண்டு செல்ல இவர்கள் 1 மணி நேரத்திற்கு 1000 ரூபாய் வசூல் செய்கிறார்கள். தண்ணீர் கிடைத்தால் போதும் என்ற மனநிலையிலுள்ள மக்களும், வேறு வழியின்றி இப்படி காசு கொடுத்து தண்ணீரை நிரப்புகிறார்கள்.
இதேபோல டேங்கர் லாரிகள் அதிக விலைக்கு தண்ணீரை விற்பனை செய்யும் கொடுமையும் புற நகர் பகுதிகளில் கொடி கட்டி பறக்கிறது. ஏற்கனவே ஏடிஎம்கள், ஸ்வைப் மிஷின்கள் செயல்படாமல் உள்ள நிலையில், கையிலும் பணமின்றி தண்ணீருக்கு பணம் கொடுக்க முடியாமல் மக்கள் திணறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications