சென்னை பி.பி.ஓ. பெண்ணை குத்திக் கொன்றவர், 18 வயது பெண்ணை கொன்ற வழக்கில் கைதானவர்
சென்னை: சென்னை பெருங்குடியில் கால் சென்டரில் வேலை பார்த்த பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சாப்ட்வேர் என்ஜினியர் ஏற்கனவே ஒரு 18 வயது பெண்ணை கொலை செய்த வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை வேளச்சேரியில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தின் பிபிஓவில் அதாவது கால் சென்டரில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்தவர் வெங்கடாஜலபதி(28). அவர் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காட்டைச் சேர்ந்த வைஷியா(25) என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். வைஷியா அவரது காதலை ஏற்கவில்லை.
வைஷியா கேரளாவைச் சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்துள்ளார். இது வெங்கடாஜலபதிக்கு பிடிக்காமல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் வைஷியா அதை கண்டுகொள்ளாமல் பிரவீனை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வெங்கடாஜலபதி கடந்த திங்கட்கிழமை இரவு வைஷியாவுக்கு போன் செய்து வேலை விஷயமாக பேச வேண்டி உள்ளது, அதனால் நீ பெருங்குடி ரயில் நிலையத்திற்கு வா என்று அழைத்துள்ளார். அங்கு சென்ற இடத்தில் அவர் வைஷியாவை 16 முறை கத்தியால் வயிற்றில் குத்தினார். இதில் அந்த பெண் பரிதாபமாக உயிர் இழந்தார். இதையடுத்து வெங்கடாஜலபதி தன்னைத் தானே குத்திக் கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து வெங்கடாஜலபதியை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு போராடிய அவர் நேற்று அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.
வெங்கடாஜலபதி முன்னதாக ஈரோட்டில் தனது காதலை ஏற்க மறுத்த 18 வயது இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.