திருச்சி, கரூர் தேனியில் கனமழை: தமிழகம் முழுவதும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
சென்னை: திருச்சி, கரூர், தேனி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெப்பம் தணிந்துள்ளது. தென் மேற்கு வங்க கடலில் லட்சத்தீவு அருகே உருவாகி உள்ள வழி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 4ஆம் தேதி முதல் கத்திரி வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக சில இடங்களில் இடியுடன் கனமழையும் பெய்தது.

திருச்சியில் மழை
திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. காளிப்பட்டி, பச்சைமலை, வேங்கடத்தானூர், பெருமாள்மலை அடிவாரம், மதுராபுரியில் கன மழை பெய்து வருகிறது. மழை பெய்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூரில் மழை
கரூர் மாவட்டம் குளித்தலை சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது.

தேனியில் மழை
தேனி சுற்றுவட்டாரப்பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும், வைகையில் இருந்து திறக்கப்பட்ட கூடுதல் தண்ணீர் நிறுத்தப்பட்டதன் காரணமாகவும் தற்போது 37 அடி வரை உயர்ந்துள்ளது. அதேபோல் பெரியாறு அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து 116 அடியை நெருங்கி வருகிறது.

அணை நீர்மட்டம் உயர்வு
இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணை நீர்மட்டம் 115.50 அடியாக உள்ளது. அணைக்கு 566 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணை நீர்மட்டம் 37.30 அடி. வரத்து 314 கன அடி. திறப்பு 60 கன அடி. மஞ்சளாறு நீர்மட்டம் 43.20 அடி. வரத்து 66 கன அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 10 கனஅடி.

வால்பாறையில் மழை
வால்பாறை பகுதியில் கோடை சீசன் தொடங்கிய நிலையில், கடந்த 2 வாரத்துக்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. மே மாதம் முதல் வாரத்தில் இருந்தே வால்பாறை சுற்றுவட்டார பகுதி முழுவதும் பலத்த இடியுடன் கூடிய கன மழையும், சில நேரங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.

ஆறுகளில் வெள்ளம்
தொடர் மழையின் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சோலையார் அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக பச்சைமலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வழிமண்டல மேலடுக்கு சுழற்சி
இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் லட்சத்தீவு அருகே உருவாகி உள்ள வழி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி நகர்வதால் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன்
காணப்படும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

பதிவான மழை அளவு
சென்னையில் இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மழை தூறல்களும் விழுந்தது. நேற்று காலை முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சோலையார் அணையில் 60 மி.மீ., வால்பாறை, நீரார் 3 மி.மீ., மழையும் பெய்துள்ளது. மணமேல்குடியில் 7 செ.மீ. மழையும், சிவகாசியில் 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது. பெரியாறு 6, தேக்கடி 3, கூடலூர் 3, உத்தமபாளையம் 2, சண்முகாநதி அணை 8, வீரபாண்டி 2, வைகை அணை 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications