நாளை முதல் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்- சென்னையில் பாதுகாப்பு தீவிரம்
சென்னை: சென்னையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான சிலைகள் நாளை கரைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை நகரில் 2400 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

மூன்று நாட்கள் கரைக்கலாம்:
இந்தச் சிலைகளுக்கு இந்து அமைப்பினரும், பொது மக்களும் பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். சென்னையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை வருகிற 20 ஆம் தேதி, 21ஆம் தேதி, 23 ஆம் தேதி ஆகிய 3 நாட்களில் கரைக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இதில் பெரும்பாலான சிலைகள் 20 ஆம் தேதியே கரைக்கப்படலாம் என தெரிகிறது.

போலீசார் பாதுகாப்பு:
இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

ராட்சத கிரேன்கள் வரவழைப்பு:
சிலைகளை கரைப்பதற்காக ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்படுகின்றன. சிலையை கரைக்கும் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அந்த பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

மது அருந்தக் கூடாது:
இரவு நேரத்திலும் சிலை கரைப்பு பணிகள் நடப்பதால் மின் விளக்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மது அருந்தி விட்டு ஊர்வலத்தில் கலந்து கொள்ளக்கூடாது, அனுமதிக்கப்பட்ட சாலையில் மட்டுமே விநாயகர் ஊர்வலம் செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளார்.

போக்குவரத்து மாற்றம்:
சிலை கரைக்கும் நாட்களில் சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சிலை கரைப்பு நாட்களின் போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications