தமிழகத்தில் அனல் காற்று அதிகரிக்கும்- வானிலை எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்து சில நாட்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்புண்டு என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: தமிழகம் புதுச்சேரியில் அடுத்த மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்து வரும் சில நாட்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்புண்டு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை காலத்தின் உச்சமான 'அக்னி நட்சத்திரம்' தொடங்கி வெயில் வறுத்தெடுத்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் வெயில் கொளுத்தி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

அக்னி வெயில்
திருத்தணியில் 115 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. அனல் காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். திருத்தணி, திருச்சி, வேலூர், மதுரை, கரூர், நெல்லை, வேலூர், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. ஒரு சில இடங்களில் கோடை மழையும் பெய்து வருகிறது.

அனல் காற்று
இந்த நிலையில் வரும் நாட்களில் வெயில் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திர பகுதிகளில் தொடர்ந்து, வழக்கத்தை விட அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. அந்த பகுதியில் இருந்து வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி வெப்ப காற்று வீசுகிறது.

வெப்பம் அதிகரிக்கும்
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வழக்கத்தை விடவும் 2 முதல் 3 டிகிரி வெப்பநிலையும், உள் மாவட்டங்களில் வழக்கத்தை விடவும் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கோடை மழை
இந்த சூழல் மேலும் 2 அல்லது 3 தினங்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடல் காற்றின் தன்மையை பொறுத்து, வெப்பநிலை குறையும். அதே சமயம் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications