2 நாட்களுக்கு 107 டிகிரி வரை வெயில் வெளுக்குமாம்!
சென்னை: சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு கடும் வெயில் அடிக்கும் என்றும், 107 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்ப நிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயிலுக்கு இடையில் கோடை மழை சின்ன பிரேக் விட்டது. இப்போது மீண்டும் வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. சென்னையில் வெயில் மிக மிக கடுமையாக இருக்கிறது. வட மாவட்டங்களிலும், குறிப்பாக வேலூரிலும் வெயில் வெளுத்து வாங்குகிறது. இதனால் பகலில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தே காணப்படுகிறது.

நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரி அளவு வெயில் அடித்தது. வெயில் கடுமையாக இருந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். தண்ணீர், இளநீர், ஜூஸ், மோர் போன்றவற்றைக் குடித்து சமாளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இரவிலோ வீடுகளுக்குள் இருக்க முடியவில்லை. கடும் புழுக்கத்தால் மக்கள் தூங்கக் கூட முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு சென்னையில் 107 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் அடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், தரைக்காற்று மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசுவதாலும், கடற்காற்று கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி தாமதமாக வீசுவதுடன், வலுவிழந்து வீசுவதாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
எனவே அடுத்து வரும் இரு தினங்களுக்கு அதிகபட்சமாக 107 டிகிரி வெயில் பதிவாகலாம். வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும் என்றார் அவர்.
எனவே பகலில் வெளியில் செல்வோர் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது. வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் இன்னும் கூடுதல் உஷாராக இருப்பது அவசியம்.












Click it and Unblock the Notifications