கொலைகார நகராக மாறுகிறதா சிங்கார சென்னை? அடுத்தடுத்து உலுக்கும் கொலைகள்
சென்னையில் அடுத்தடுத்து நடைபெறும் கொலை சம்பவங்களால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: சென்னையில் அடுத்தடுத்து நெஞச்சை உலுக்கும் கொலைகள் நடந்து வருவதால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பணம், நகை, முன்விரோதம், கள்ளக்காதல் உள்ளிட்டவைகளுக்காக தற்போது கொலைகளும் கொலைவெறி தாக்குதல்களும் அதிகரித்து விட்டன. இதற்கு சென்னையில் அண்மைகாலங்களில் நடைபெற்ற கொலைகளே சாட்சியாகும்.
வாழை மரத்தை வெட்டுவதை போல் வெட்டி கூறுபோடுவதை பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது. அதுவும் பொதுமக்கள் கண் முன்னால் கூட கொலைகள் அரங்கேறுகின்றன.
யார் கொலை
சென்னையில் அண்மையில் நடந்த கொலைகள் குறித்த நினைவலைகளை பார்ப்போம். கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போரூர் அருகே ஒரு வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி ஹாசினியை பக்கத்து வீட்டில் வசித்த தஷ்வந்த் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றார். இந்த சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது.
கள்ளக்காதலை போட்டு கொடுத்த மகன்
சென்னை நெசப்பாக்கத்தை அடுத்த எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதியின் 9 வயது மகன் ரித்திஷ் சாய். இந்நிலையில் மஞ்சுளாவுக்கும் நாகராஜுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இதை ரித்திஷ் தனது தந்தையிடம் போட்டு கொடுத்துவிட்டார். இதனால் மஞ்சுளாவை கார்த்திகேயன் கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் , மார்ச் 1ஆம் தேதி சிறுவனை பாட்டிலால் குத்தி கொலை செய்தார்.
காதலிக்க மறுப்பு
சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் சங்கரி. இவரது மகள் அஸ்வினி. இவர் கோடம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி கல்லூரியை விட்டு வெளியே வந்த அவரை அவரது காதலன் அழகேசன் என்பவர் பட்டபகலில் நடுரோட்டில் வெட்டி சாய்த்தான். இதில் அந்த மாணவி இறந்துவிட்டார். தன்னை காதலித்துவிட்டு பிறகு பழகுவதை நிறுத்திக் கொண்டதால் ஆத்திரம் ஏற்பட்டதால் வெட்டியதாக அழகேசன் வாக்குமூலம் அளித்தார்.
நகைகள் கொள்ளை
சென்னை வடபழனியில் கோயில் குருக்களாக உள்ளவர் பாலகணேஷ். இவரது மனைவி ஞானப்பிரியா. இவர்கள் இருவரும் வடபழனி சிவன் கோயில் தெருவில் வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்தனர். அங்கு நேற்று இரவு வீடு புகுந்த மர்மநபர்கள் பாலகணேஷையும் ஞானப்பிரியாவையும் கட்டி போட்டு வீட்டிலிருந்த நகைகளை எடுத்து கொண்டு ஞானப்பிரியாவையும் கொன்றுவிட்டனர்.
அதிர்வலைகள்
சென்னை மௌலிவாக்கம் ஹாசினி முதல் வடபழனி ஞானப்பிரியா வரை மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்த கொலைகளால் சிங்கார சென்னையாக இருந்தது தற்போது கொலைக்கார சென்னையாக மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.