மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த மத்திய அரசு ஊழியரின் மனைவி
சென்னை: சென்னையில் மத்திய அரசாங்க உயரதிகாரியாக பணி புரிபவரின் மனைவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் வசித்து வருபவர் பாலசுப்ரமணியன். இவர் சென்னை நுங்கம்பாக்கம் கலால் வரித்துறை துணை ஆணையராக பணியில் உள்ளார். இவருடைய மனைவி பார்வதி பட். இத்தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
மூத்த மகள் பெங்களூரில் பணி புரிந்து வருகின்றார். இளையவர் கல்லூரியில் படித்து வருகின்றார். இவர்கள் தெற்காசிய விளையாட்டு கிராம பி- 5 பிளாக்கில் வசித்து வருகின்றனர்.
தினமும் காலை 5 மணிக்கே நடைபயிற்சியில் ஈடுபடும் பழக்கமுள்ள பார்வதியை நேற்று காலையில் படுக்கையில் காணவில்லை. எப்போதும் போல அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருப்பார் என பாலு நினைத்துள்ளார். ஆனால், அதிக நேரம் ஆகியும் பார்வதி வீடு திரும்பவில்லை.
தன்னுடைய வீட்டு மாடியில் இருந்து அவர் பார்த்தபோதுதான் பார்வதி கீழே இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுப்ரமணியன் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில் பார்வதி பட் கடந்த சில நாட்களாக மனநல பிரச்சினை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்தார் என்றும், தான் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.