தாய்மை உள்ளம் கொண்ட ரசிகர்களுக்கு சமர்ப்பணம்.. 'செவாலியர்' கமல் உருக்கம்
சென்னை: கலை இலக்கியத்திற்காக, நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியர் என்ற உயரிய விருதை வழங்குவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து, கமல் ஹாசன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கமல் கூறியுள்ளதாவது: பிரெஞ்சு அரசு கலை இலக்கியத்திற்கான செவாலியே விருதை, எனக்கு அளிக்க முன்வந்துள்ளது. பெருமிதத்துடன், நன்றியுடன், பணிவுற்று அவ்விருதை ஏற்கிறேன்.

அந்த விருதின் பெருமையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய ஐயா சிவாஜி கணேசனையும், வட நாட்டில் பாமரரையும் அறியச் செய்த சத்யஜீத்ரேவையும் கரம் கூப்பி வணங்குகிறேன்.
இச்செய்தியை, எனக்கு தெரிவித்த இந்திய பிரெஞ்சு தூதருக்கும் எனது நன்றி. இனி நான் செய்ய வேண்டிய கலை இலக்கிய பணிக்கான ஊக்கியாகவே இவ்விருதை கருதுகிறேன். கலை கடற்கரையில் கை மண் அளவு அள்ளிவிட்ட பெருமை எவ்வளவு சிறு பிள்ளை தனமானது என்பதை உணர்கிறேன்.
வயதில்லாமல் எப்போதும் ஆர்ப்பரிக்கும் கலை கடல், இத்தகைய தருணங்களில் கரை மோதி, என்போன்றோர் முகத்தில் தெளித்து பெருவச மயக்கம் கலைத்து, உப்பிட்டு பெரும் நினைவை உணரச் செய்கிறது.
இதுவரையிலான எனது கலைப்பயணம் தனி மனித பயணம் இல்லை என்பதை உணர்கிறேன். கை தாங்கி எழுத்தும் கலையும் அறிவித்த பெரும் கூட்டத்துடனே நான் ஏற்ற யாத்திரை இது என்பதை உணர்கிறேன்.
அக்கூட்டத்தில் பெரும்பான்மை தமிழகத்து ரசிகர்கள். 4 வயது முதல் என் கை பிடித்து படியேற்றி பீடத்தில் அமர்த்தி பார்க்கும் தாய்மை உள்ளம் கொண்ட அவர்களுக்கும் இந்த விருது சமர்ப்பணம்.
என் பெற்றோர் இருந்து பார்க்க முடியாத குறையை என் குடும்பத்தில் எஞ்சிய பெரியோரும், இளையோரும், எனது சிறு வெற்றிக்கும் ஆர்ப்பரிக்கும் ரசிகர் கூட்டமும் போக்கி விடுகிறது. நன்றியுடன் கமல்ஹாசன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications