சிதம்பரம் நடராஜர் கோவிலில் 800 ஆண்டு கால பழமையான சோழர் கால மழை நீர் வடிகால் அமைப்பு கண்டுபிடிப்பு
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சோழர் காலத்து 800 ஆண்டு கால பழமையான மழை நீர் வடிகால் அமைப்பு குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
சமீபத்தில், 30 செ.மீ அளவுக்கு சிதம்பரத்தில், கொட்டி தீர்த்த கனமழையால் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் தீர்த்தக் குளம் மட்டுமின்றி பிரகாரங்களிலும் மழை நீர் புகுந்தது.
மோட்டார் மூலம் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. இதன்பிறகு கோயிலை ஆய்வு செய்தார், கடலூர் மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி.

வடக்கு கோபுரம்
கோயிலில் வடிகால் அமைப்புகள் இருந்தும் தண்ணீர் வெளியேறாதது குறித்து விசாரித்தார் அவர். வடிகால் வழிகளை கண்டறிந்து முழுமையாக சீரமைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து கோயிலின் வடக்கு கோபுரம் அருகே அமைந்துள்ள வடிகால் நீர் வழிப்பாதையை முழுவதும் தோண்டும் பணிகள் துவங்கின. அப்போது நடராஜர் கோயிலில் இருந்து துவங்கும் வடிகால் பாதை திருப்பாற்கடல் குளத்திற்கும், அங்கிருந்து தில்லை காளியம்மன் கோயில் குளத்திற்கும் செல்வதும் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

800 வருட காலம்
800 ஆண்டுகளுக்கு முன்பே கருங்கல் கொண்டு அமைக்கப்பட்ட அற்புதமான நீர்வழி வடிகால் போதிய பராமரிப்பின்றியும், மக்களின் ஆக்கிரமிப்பாலும் தடைபட்டுப் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோயிலில் இருந்து ஆங்காங்கு 10 இடங்கள் தோண்டப்பட்டு பார்த்தபோது, 4 அடி உயரத்துடன் கருங்கல்லால் கட்டப்பட்ட வடிகால் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்தனர்.

தில்லை காளியம்மன்
இதன்பிறகு உள்ள வழித்தடத்தை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தில்லை காளியம்மன், கோவில் குளத்தில் அமைந்துள்ள வடிகால் முகத்துவாரத்தை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபடவுள்ளனர்.

வடிகால் வசதி
சிதம்பரம் சார் ஆட்சியர் தலைமையில், கோயில் நிர்வாகம், சிதம்பரம் நீர்நிலை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் சிதம்பரநாதன், நகராட்சி நிர்வாகம், வடிகால் வாரியம் முயற்சியால் 800 ஆண்டுகளை கடந்த சோழர்களின் கட்டுமானம் வெளிவர உள்ளது. ஒரு வகையில் அதிக மழை பெய்து தண்ணீர் கோவிலுக்குள் போனதால், இந்த மீட்டெடுப்பு முயற்சி சாத்தியப்பட்டுள்ளது என்கிறார்கள் பக்தர்கள்.












Click it and Unblock the Notifications