தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்ககோரி பிரதமருக்கு பன்னீர்செல்வம் கடிதம்
தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்ககோரி பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்கோரியும், இலங்கை வசம் உள்ள 109 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க கோரியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுஞ்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அவர்களை கைது செய்தனர்.
அவர்கள் பயன்படுத்திய படகுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் நூற்றுக்கணக்கான படகுகளும் இலங்கை வசம் உள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க வேண்டும். இன்று இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். இலங்கை வசமுள்ள 109 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.