விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்த முதல்வர் பழனிச்சாமி!
விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதல்வர் பழனிசாமி சிகிச்சைக்கு உதவினார்.
வேலூர்: ஆம்பூர் அருகே நடந்த சாலைவிபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை முதல்வர் பழனிசாமி மீட்டு, தன்னுடைய ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.
கிருஷ்ணகிரியில் உள்ள எம்.ஜி.ஆர். திடலில் 90 ஜோடிகளுக்கு திருமண விழா இன்று நடைபெற்றது. அதேபோல அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கலையரங்கம், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன. இந்த விழாக்களில் முதல்வர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இதன்பிறகு விழாக்களை முடித்து கொண்டு கிருஷ்ணகிரியிலிருந்து முல்வர் தனது காரில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஆம்பூர் அருகே வடசேரி என்னும் இடத்தில், மினி சரக்கு வாகனமும், பைக்கும் மோதி விபத்துக்குள்ளாகி அதில், காயமடைந்த இரண்டு பேர் சாலையோரம் போராடுவதை கண்டார்.
இதையடுத்து உடனடியாக தன் வண்டியை நிறுத்த சொல்லிய முதல்வர், காரைவிட்டு இறங்கி பார்வையிட்டார். பின்னர், தன்னுடன் வந்த ஆம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க சொன்னார். இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு காயமடைந்தவர்களை அதே ஆம்புலன்சில் அனுப்பிவைத்தார்.