செலவுக்காக சிறுவனைக் கடத்தி விற்க திட்டம் போட்ட கள்ளக்காதல் ஜோடி!
திருச்சி: திருச்சியில் கள்ளக்காதல் ஜோடி ஒன்று தனது காதல் மற்றும் காமக் களியாட்ட செலவுக்கு பணம் தேவைப்பட்டதால், பக்கத்து வீட்டு சிறுவனைக் கடத்தி ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்று சிக்கியுள்ளது.
திருச்சி தென்னூரைச் சேர்ந்தவர் ஷாஹென்ஷா. ஆட்டோ டிரைவரான இவரது மனைவி பெயர் அனீஸ் பாத்திமா. இவர்களுக்கு அர்ஜத் கான் என்ற 2 வயது மகன் உள்ளான். நவம்பர் 4ம் தேதி தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அர்ஜத் கானை திடீரென காணவில்லை. இதனால் பதறிப் போன அனீஸ் பாத்திமா மகனைத் தேடிப் பார்த்தார். கணவருக்கும் தகவல் கொடுத்தார். அவரும் விரைந்து வந்தார். அக்கம் பக்கத்தினருடன் தேடிப் பார்த்தும் பிள்ளையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதைடுத்து தில்லை நகர் போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுவனைத் தேடும் பணியை முடுக்கி விட்டனர். விசாரணையில் அனீஸ் பாத்திமாவின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஜெனீபர் (40) என்பவர் மீது போலீஸாருக்குச் சந்தேகம் வந்தது. அவரைப் பிடித்து தீவிரமாக விசாரித்தபோது உண்மை வெளியானது.
ஜெனீபருக்குத் திருமணமாகி அவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதனால் லோகநாதன் என்ற 30 வயது நபருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார் ஜெனீபர். இவர்கள் இருவரும் உல்லாசக் காதலில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் செலவு செய்ய கையில் பணம் போதவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்த இருவரும் அனீஸ் பாத்திமாவின் மகனைக் கடத்தி விற்றுப் பணம் சம்பாதிக்க திட்டமிட்டனர்.
அதன்படி ஜெனீபர், குழந்தையைக் கடத்தி லோகநாதனிடம் கொடுத்து கரூருக்குப் போகும்படியும் அங்கு தான் வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து டாக்சி ஒன்றைப் பிடித்து அதில் லோகநாதன் கிளம்பிப் போய் விட்டார். அங்கு லாட்ஜ் எடுத்தார். பின்னர் ஜெனீபரும் கரூர் போய்ச் சேர்ந்தார். இருவரும் குழந்தையுடன் இரவு லாட்ஜில் தங்கியுள்ளனர்.
அடுத்த நாள் லோகநாதன் திருச்சி திரும்பினார். ஜெனீபர் குழந்தையுடன் மங்களூர் போனார். அங்கு தனது கணவரின் தம்பி மணியிடம் குழந்தையை ஒப்படைத்து ரூ. 1.5 லட்சத்திற்கு விற்று விடுமாறு கூறி விட்டு திருச்சி திரும்பியுள்ளார். அதன் பிறகுதான் அவர் போலீஸில் சிக்கினார். இதையடுத்து போலீஸார் ஜெனீபரையும், லோகநாதனையும் கைது செய்தனர். தற்போது குழந்தையை மீட்க போலீஸ் தனிப்படை மங்களூர் விரைந்துள்ளது.












Click it and Unblock the Notifications