ராமநாதபுரத்தில் இரண்டு குழந்தைத் திருமணங்கள்: தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடைபெற இருந்த இரண்டு குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் சத்திரக்குடி அருகே உள்ளது கீழம்பல். இந்த ஊரை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவிக்கும் தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலகோட்டையைச் சேர்ந்த வேலு, அன்னபூரணி ஆகியோரின் மகன் சுரேஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அவர்களது திருமணம் நேற்று காலை கீழம்பல் கிராமத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதேபோல கமுதி தாலுகா கள்ளிக்குளம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் மலையரசி, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பாலம்மாள், கிராம சேவிகா குணசுந்தரி, சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் பால முருகன், சத்திரக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் விரைந்து சென்று 2 சிறுமிகளுக்கு நடக்க இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களது பெற்றோர்களிடம் அறிவுரை வழங்கி உறுதிமொழி எழுதி வாங்கினார்.












Click it and Unblock the Notifications