மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - மே 7ல் மீனாட்சி திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வெள்ளிக்கிழமையன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
மதுரை: பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வெள்ளிக்கிழமையன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
மே 7ஆம் தேதி திருக்கல்யாணமும், 8ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
தினசரியும் காலை மாலையும் மீனாட்சி, சொக்கநாதர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவை கண்டு மகிழ பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் வழங்கப்படுவதாக கோயில் தெரிவித்துள்ளது.
சித்திரை திருவிழா கொடியேற்றம்
மதுரை மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதனையொட்டி கொடிமரத்தின் முன்பு மீனாட்சி சுந்தரரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சிம்மவாகனத்தில் உலா
மாலை சுவாமி சுந்தரேஸ்வரர் சிம்ம வாகனத்திலும், மீனாட்சியம்மன் விருட்ஷப வாகனத்திலும் மாசி வீதிகளில் உலாவந்தனர். வெள்ளிக்கிழமை முதல் தினசரி அம்மன், சுவாமி, பிரியாவிடை பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மீனாட்சி பட்டாபிஷேகம்
மே.5ஆம் தேதி இரவு 6.55 மணி முதல் 7.19 மணி வரை மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. மே 6ல் திக்கு விஜயம் நடைபெறும். அது முதல் மதுரையில் மீனாட்சி ஆட்சி தொடங்குகிறது.
மீனாட்சி திருக்கல்யாணம்
மே.7ல் காலை 8.55 மணி முதல் 8.59 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 8ஆம் தேதி மீனாட்சி, சுவாமி, பிரியாவிடையின் தேரோட்டம் நடைபெறுகிறது. 4 மாசி வீதிகளிலும் தேர் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாகும்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா
மே 9ம் தேதி கோயில் தெப்பத்தில் தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் விழா நிறைவுபெற உள்ளது. விழாவை முன்னிட்டு அம்மன், சுவாமி பல்வேறு திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். இதற்காக சிம்மம், யாளி, யானை உள்ளிட்ட வாகனங்களை அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது.
சுற்றுலா பயணிகள் வருகை
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலும், மாட வீதிகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஏராளமான சுற்றுலா பயணிகள் மதுரைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.