இசையமைப்பாளர் இளையராஜா மீது கிறிஸ்தவ அமைப்பு போலீசில் புகார்!
இயேசு கிறிஸ்து பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜா மீது சென்னை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: இயேசு கிறிஸ்து பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிறிஸ்தவ நல்லிணக்க இயக்கம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகிரிஷியைப் போல வேறு ஒருவர் கிடையாது. இயேசு உயிர்த்தெழுந்து வந்தார் என சொல்வார்கள். அடிக்கடி டாக்குமென்டரி பார்ப்பதை நான் வழக்கமாக கொண்டுள்ளேன்.
இதுவரை நான் பார்த்த டாக்குமென்டரிகளில் இயேசு இறந்தார், உயிர்த்தெழுந்து வந்தார் என்பதில் தான் கிறிஸ்தவமே நிற்கிறது. வளர்ந்து வந்தது, அந்த பாயிண்டை சொல்லி அப்படி ஒன்று நடக்கவில்லை என்று யூடியூபில் வரலாற்று ரீதியாக போடுகிறார்கள். ஆனால் உண்மையான உயிர்த்தெழுதல் நடந்தது ஒரே ஒருவருக்குத்தான். அது பகவான் ரமண மகரிஷிக்கு மட்டும்தான். உலகத்திலேயே அவருக்கு மட்டும் உயிர்த்தெழுதல் நடைபெற்றிருக்கிறது. அதுவும் அவரின் 16 வயதில் நடந்ததாக இளையராஜா பேசியதாக தகவல்கள் வெளியாகின.
கிறிஸ்தவத்தையும் அதன் ஆணி வேரான மத நம்பிக்கையையும் சிறுமைப்படுத்துவதாக, ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் மனதைப் புண்படுத்தியதாக இளையராஜா மீது கிறிஸ்தவ அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், கிறிஸ்தவ நல்லிணக்க இயக்கம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. அதில் கிறிஸ்தவ மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேசிய இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.