வயிற்று வலி குணமாக பிரார்த்தனை.. ஜெபம் செய்தபோது சில்மிஷம்: கோவையில் பாதிரியார் கைது
கோவை: வயிற்று வலிக்கு சிறப்பு பிரார்த்தனை செய்வதாக கூறி இளம் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம்சாட்டி, கிறிஸ்தவ பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் ஜெப கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள சாந்திமேடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் மனைவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த ஒரு வருடங்களாக தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதை கவனித்த, அப்பெண்ணின் வீட்டின் அருகே உள்ள ராணி என்பவர், கிறிஸ்தவ கூட்டத்திற்கு போய், ஜெபம் செய்தால் வயிற்று வலி குணமாகிவிடும் என்று கவிதாவுக்கு ஐடியா கொடுத்துள்ளார். ராணி கூறியபடி சங்கனூர் பகுதியில் உள்ள சர்ச் ஆப் பெதஸ்தா என்ற ஜப மையத்திற்கு கவிதா சென்றுள்ளார்.
அங்கு பாதிரியார் ஐசக் என்பவரிடம் வயிற்று வலியை சரி செய்ய பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வேண்டியுள்ளார் கவிதா. அப்படி ஸ்பெஷல் பிரார்த்தனை செய்ய ரூ.30 ஆயிரம் ரூபாய் செலவாகும் என பாதிரியார் கூறினாராம். இதற்கும் ஒப்புக்கொண்ட கவிதா, முதற்கட்டமாக 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, சிறப்பு பிரார்த்தனை செய்ய ஜெப கூடத்திற்கு அப்பெண்ணை நேற்றிரவு அழைத்த பாதிரியார் ஐசக், அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிரியார் ஐசக் மீது நடவடிக்கை எடுக்ககோரி, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாகம் இந்து முண்ணனியினரும் போராடினர்.
இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அனுமதியின்றி இயங்கி வரும் ஜெப கூடங்களுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் பாதிரியாரை பத்திரமாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.