‘சொன்னதெல்லாம் பொய்’... சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு எதிராக கிறிஸ்தவர்கள் போராட்டம்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் குறித்து தவறான தகவல்கள் கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. கடந்த 15 மற்றும் 16ம் தேதி ஒளிபரப்பப் பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் ஒருவர் கோவையைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் தாமஸ் அக்வானஸ் மற்றும் கன்னியாஸ்திரிகள் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இது தொடர்பாக உரிய விசாரணைகள் இன்றி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியதாக, கடந்த சனிக்கிழமையன்று 900 கிறிஸ்தவர்கள் ஒன்று சேர்ந்து சென்னை செயிண்ட். மைக்கேல் சர்ச்சில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கோவை விகார் ஜெனரல் ரெவரண்ட் ஜான் ஜோசப் ஸ்டெயின்ஸ் கூறுகையில், ‘தவறான செய்தியை உரிய விசாரணையின்றி ஒளிபரப்பு செய்ததற்காக கண்டனம் தெரிவித்து இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்ட தகவல்கள் தவறானவை' `என்றார்.
மேலும் டிவி நிறுவனம் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யவுள்ளதாகவும், நாடு முழுவதும் சானலுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.