பழைய 500, 1000 ரூபாய் செல்லாது.. சைக்கிள் கேப்பில் விலையேற்றிய சிகரெட் நிறுவனங்கள்
ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை பயன்படுத்தி சில கடைகளில் சிகரெட் விலையை உயர்த்தியுள்ளனர்.
சென்னை: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் சிகரெட் பாக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது.
நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து வங்கி மற்றும் தபால் நிலையங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாடு முழுவதும் புதிய ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரவில்லை.
பல இடங்களில் ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டை பயன்படுத்தி, சிகரெட் மொத்த விற்பனையாளர்கள் விலையை தாமாக உயர்த்தியுள்ளனர்.
தமிழகத்தில் பல பகுதியில் உள்ள அனைத்து பெட்டிக்கடைகள் மற்றும் மொத்த வியாபார கடைகளுக்கும் டீலர்கள் மூலம் சிகரெட் சப்ளை செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் மத்திய மாநில அரசுகள் பட்ஜெட்டில் சிகரெட் விலையை உயர்த்தி அறிவிப்பது வழக்கம். அந்த விலையில் தான் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால் பட்ஜெட் போடுவதற்கு முன்பே அனைத்து பெட்டிக்கடைகளிலும் சிகரெட் விலை தானாக உயர்ந்து விடும். அதேபோல் தற்போது ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை பயன்படுத்தி மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிகரெட், பீடி விலை திடீரென மறைமுகமாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சிசர் சிகரெட் பாக்கெட் ஒன்றிற்கு ரூ.3 உயர்ந்துள்ளது. பில்டர் சிகரெட் பாக்கெட் ஒன்றிற்கு 3.60 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளன. அதேபோல் மற்ற சிகரெட் பாக்கெட்களுக்கும் 4 ரூபாய் வரை விலையை மறைமுகமாக உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்.