சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க இன்று சென்னை வரும் பிரணாப்: 4 அடுக்கு பாதுகாப்பு
சினிமா நூற்றாண்டு விழா கடந்த சனிக்கிழமை சென்னையில் துவங்கியது. விழாவை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். இந்நிலையில் நிறைவு விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருகிறார்.
இன்று கர்நாடக மாநிலம் பபிஜப்பூரில் சைனிக் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டங்களை துவங்கி வைக்கிறார். அதன் பிறகு இன்று மாலை விமானம் மூலம் சென்னை வருகிறார்.
மாலை 5 மணிக்கு துவங்கும் விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளும் பிரணாப் தென்னிந்திய திரை உலகில் சாதனை புரிந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கிறார். இந்த விழாவில் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை 5.25 மணிக்கு நிகழ்ச்சி நடக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வரும் பிரணாப் நிகழ்ச்சி முடியும் வரை அதாவது இரவு 7.20 மணி வரை அங்கிருப்பார். அதன் பிறகு அவர் காரில் கிளம்பி ராஜ் பவன் சென்று இன்றைய இரவை அங்கே கழிப்பார். நாளை காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்லும் அவர் ஹெலிகாப்டர் மூலம் புதுவை செல்கிறார்.
புதுவை பல்கலைக்கழகத்தின் 23வது பட்டமளிப்பு விழாவில் பிரணாப் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கு அவர் ஸ்ரீ அரவிந்தோ பன்னாட்டு கல்வி மையத்தின் மாணவர்களிடையே உரை நிகழ்த்துகிறார். வரும் 26ம் தேதி காலை அவர் சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
பிரணாப் வருகையையொட்டி விமான நிலையம், நேரு அரங்கு, ராஜ் பவனில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.