ரூ 80 கோடி சிலைத் திருட்டு: வீ சேகர் பாஸ்போர்ட் முடக்கம்... சினிமா பைனான்சியர் இருவர் கைது!
சென்னை: ரூ.80 கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் திருட்டு வழக்கில் சினிமா பைனான்சியர் உள்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஏற்கெனவே கைதாகி ஜாமீனில் வந்துள்ள இயக்குநர் வி.சேகரின் பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
வந்தவாசி அருகே உள்ள சவுந்தர்யபுரத்தில் இருக்கும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 3 சிலைகளும், பையூர் என்ற கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 3 சிலைகளும் கடந்த ஜனவரி மாதம் திருடப்பட்டன. அதே ஜனவரி மாதம் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் ராமானுஜபுரத்தில் உள்ள மணிகண்டேஸ்வரர் கோவிலிலும் சிவன், பார்வதி சிலைகள் திருட்டுபோனது.

ரூ.80 கோடி மதிப்புள்ள இந்த சிலைகளை, சிலை திருட்டு தடுப்பு போலீசார் மீட்டனர்.
இந்த சிலைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் சினிமா தயாரிப்பு நிர்வாகி தனலிங்கம், சென்னை அரசு அச்சக ஊழியர் கருணாகரன், பிரபல சினிமா இயக்குநர் வி.சேகர், பெண் நிருபர் மாலதி (வயது 35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில், வி.சேகர், மாலதி ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். வி.சேகர் சென்னை பெருநகர 2-வது கோர்ட்டில் தினமும் காலையும், மாலையும் ஆஜராகி கையெழுத்து போட்டு வருகிறார். ரூ.20 லட்சம் ஜாமீனில் அவர் விடுதலையானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது பாஸ்போர்ட்டும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சிலை திருட்டு தடுப்பு போலீசார் சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை, திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜாய்சன் சாந்தகுமார் (வயது 35) என்பவரையும் கைது செய்தனர்.
இதற்கிடையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னை போலீஸ் அதிகாரி ரவிச்சந்திரன், மாரி என்ற மாரிசன், கோகுல் ஆகிய 3 பேரை பெங்களூரில் கர்நாடக மாநிலம் உப்பரப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு சிறையில் இவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மாரியும், கோகுலும் சிலைகளை கோவில்களில் இருந்து திருடி வந்தவர்கள். போலீஸ் அதிகாரி ரவிச்சந்திரன் சென்னையில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர். தற்போது அவர் பணி இடைநீக்கத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர் சிலை திருட்டு சதித்திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் என்று கூறப்படுகிறது.
சினிமா பைனான்சியர்கள்
இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக சென்னை மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் சினிமா பைனான்சியர் வெங்கட்ராமன், சிலை திருட்டு பழைய குற்றவாளி ராஜசேகர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் போலீஸ் பிடியில் சிக்கியவர்கள் எண்ணிக்கை 10- ஆக உயர்ந்துள்ளது.
திருடப்பட்ட 8 சிலைகளையும், இயக்குநர் வீ.சேகர் வீட்டில் இருந்து எடுத்து வந்து ஒரு நாள், வெங்கட்ராமன் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிலைத் திருட்டு வழக்கில் மேலும் சில சினிமா பிரமுகர்கள் கைதாகவிருப்பதாக போலீசார் ஏற்கெனவே கூறியிருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications