இன்று பழைய கட்டணத்தில் சினிமா... ரூ.192 விலை உயர்வு போதாதாம்... கொடி பிடிக்கும் அதிபர்கள்
சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் இன்று முதல் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது.
Recommended Video
சென்னை: சென்னையில் இன்று முதல் சினிமா டிக்கெட்டின் விலை ரூ.160 ஆக உயர்த்தப்படுகிறது என்று அறிவித்த நிலையில் இன்று பழைய டிக்கெட் கட்டணத்திலேயே சினிமா டிக்கெட் விற்பனை செய்யவுள்ளதாக தியேட்டர் அதிபர்கள் தெரிவித்தனர்.
திரையரங்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிக்கெட் கட்டணத்தை கொண்டுவர வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு டிக்கெட் கட்டணத்தை எவ்வளவு அதிகரிக்கலாம் என்று அனுமதி அளித்து அறிவிப்பு ஒன்றை கடந்த 7-ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னையில் ஏசி மல்டிபிளக்ஸ் திரையரங்கு கட்டணம் அதிகபட்சமாக ரூ. 160-ம் குறைந்தபட்சமாக ரூ 50-ம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏசி அல்லாத திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணமாக ரூ. 120-ம் குறைந்தபட்சம் ரூ. 40-ம் கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம்.
சென்னையில் எவ்வளவு
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற நகரங்களில் ஏசி திரையரங்கு கட்டணம் அதிகபட்சமாக ரூ. 140-ம், குறைந்தபட்சமாக ரூ. 50-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற நகரங்களில் ஏசி இல்லாத திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணமாக ரூ. 100-ம் குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 30-ம் வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
ஜிஎஸ்டியுடன் சேர்த்து...
இதேபோல் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு என தனித்தனி கட்டண வசூலித்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய கட்டண விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இந்நிலையில் ஜிஎஸ்டியுடன் சேர்த்துரூ.192 வரை உயர்த்தியுள்ள டிக்கெட் கட்டணம் தங்கள் போதாது என்று தியேட்டர் அதிபர்கள் கூறுகின்றனர்.
இன்று பழைய கட்டணம்
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ரூ.160-டன் சேர்த்து ஜிஎஸ்டி என ரூ.192 வரை தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்த புதிய விலை விகிதம் இன்று முதல் அமலுக்கு வருவதாக இருந்தது.
நாளை முதல்வருடன் சந்திப்பு
எனினும் அந்த விலை உயர்வு எங்களுக்கு போதாது. இதனால் நாளை முதல்வரை சந்தித்து டிக்கெட் கட்டணத்தை மேலும் உயர்த்திக் கொள்ள அனுமதி வேண்டும் என்று நாங்கள் கோரவுள்ளோம். அதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று பழைய கட்டணத்திலேயே டிக்கெட் விற்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.