முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் திடீர் ஆய்வு!
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.
முல்லைப் பெரியாறு அணையில் தற்போது கேரள மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் அவர்களுக்கான சம்பளத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் கேரள போலீசாரை மாற்றி விட்டு, தமிழக போலீசார் அல்லது மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக தமிழகத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.
அணை பகுதியில் அத்துமீறி நுழைபவர்கள் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளைத் தாக்கும் சம்பவங்களும் கடந்த காலங்களில் நடந்து உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பீர்மேடு தொகுதி எம்.எல்.ஏ. பிஜிமோள் அத்துமீறி அணைப் பகுதிக்கு சென்ற போது, அவருடன் வந்த சிலர் அணையின் செயற்பொறியாளர் மாதவனை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
35 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. கேரளாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி. போன்றவர்கள் அணைக்கு சென்று பார்வையிட்டு திரும்பி வரும் போதெல்லாம் அணை பலவீனமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டையே கூறி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் முல்லைப் பெரியாறு அணையில் நேற்று ஆய்வு செய்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையின் முதன்மை கமாண்டன்ட் அனில் பாலி, உதவி கமாண்டன்ட் ஹரிச்சந்திரன் ஆகியோர் தேக்கடி ஏரியில் இருந்து படகு மூலமாக நேற்று பிற்பகல் முல்லைப் பெரியாறு அணைக்கு சென்றனர். அணை பகுதியில் சுமார் 1 மணி நேரம் ஆய்வு செய்தார்கள்.
அணையின் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை ஈடுபடுத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கையாக அணை பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கேவியட் மனுத்தாக்கல்
இதனிடையே சென்னையில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் கலந்து கொண்ட கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டி, முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக இருப்பதுடன், அந்த அணையின் பாதுகாப்பு எங்களுக்கு (கேரள மாநிலத்துக்கு) கவலை அளிப்பதாக உள்ளது. முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் கொள்கை தெளிவாக உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது, தமிழகத்துக்கு முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கிடைக்கும் நீரின் முக்கியத்துவம் பற்றி எங்களுக்கு தெரியும் என்ற ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
இதனால் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சென்னை கிளையிலும் தமிழக அரசின் உத்தரவை ஏற்று, தமிழக பொதுப்பணித்துறை சார்பில், கேரள மாநில அரசு அளிக்கும் புகார் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம், ஏதாவது உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தால், தமிழகம் தரப்பு நியாயங்களையும் கேட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி கேவியட் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.