அதிமுக செயல்வீரர் கூட்டத்தில் ரகளை... விஜயபாஸ்கர் சுற்றி வளைப்பு... மீண்டும் முத்தரையர் பிரச்சினை?

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்ட புதுக்கோட்டை அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் திடீர் ரகளை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஒவ்வொரு தொகுதியிலும் செயல்வீரர் கூட்டங்களை நடத்தத் தொடங்கிவிட்டன அரசியல் கட்சிகள். அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் அதிமுக சார்பில் நேற்று ஆவணத்தான்கோட்டை மற்றும் ஆலங்குடியில் செயல்வீரர் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். 8 மணிக்கு தொடங்கிய கூட்டத்திற்கு அரை மணி நேரம் தாமதமாகவே வந்துள்ளார் அமைச்சர்.

Clash between ADMK cadres

ஆனால், அதுவரை அமைதியாக நடந்து கொண்டிருந்த கூட்டத்தில் அமைச்சர் வந்ததும் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற நெம்மக்கோட்டையை சேர்ந்த தொண்டர் ஒருவர், ‘தேர்தல் பணிக்குழுவில் களப்பணயாற்றுவோருக்கு இடமில்லை. உங்க ஆட்களுக்கு மட்டும் பொறுப்பு போடப்பட்டுள்ளது' என எழுந்து சத்தமிட்டுள்ளார்.

ஆனால், இதற்கு பதிலளிக்காமல் அமைச்சர் மவுனம் காக்கவே, அந்தத் தொண்டர் ஆவேசமாக மேடையில் ஏற முயற்சித்துள்ளார். இதனால் பதறிப் போன அமைச்சர் ஆதரவாளர்கள் உடனடியாக அமைச்சரை பாதுகாப்பாக மேடையில் இருந்து கீழே இறங்க வைத்தனர்.

ஆனால், அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்கள் அனைவரும் அமைச்சரைச் சுற்றி வளைத்தனர். இதனால் அவர்களுக்குள்ளே ரகளை ஏற்பட்டது. ரகளையின் போது சிலர், ‘எங்கள் இனத்தை இழிவாக பேசிய அமைச்சர் எப்படி எங்களிடம் ஓட்டுக் கேட்க வரலாம்' எனக் குரல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அங்கிருந்த பெண்கள் வேகமாக வெளியேறியுள்ளனர். இதனால், நிலைமை சரியில்லை என உணர்ந்த அதிமுக நிர்வாகிகள் அமைச்சரைப் பாதுகாப்பாக வெளியேற்றி, காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

முத்தரையர் பிரச்சினை மீண்டும் தலை தூக்கி இருப்பதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவங்கள் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் கறம் பக்குடி ஒன்றியக்குழு தலைவரான கெங்கையம்மாள், அவரது கணவர் சொக்கலிங்கம் மற்றும் சில கவுன்சிலர்கள் சில தினங்களுக்கு முன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அவரது வீட்டில் சந்தித்துள்ளனர். அப்போது விஜய பாஸ்கர் அவர்களை சாதியைச் சொல்லி திட்டியதாக தகவல் பரவியது.

இதையடுத்து அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு முத்தரையர் சமுதாய அமைப்புகள் சார்பில் புதுக்கோட்டையில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதனால் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்கக் கூடாது என முத்தரையர் சமுதாயத்தினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து கடந்த மார்ச் 2-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

முத்தரையர் சமுதாயத்தினரை திருப்திபடுத்துவதற்காக முதல்வர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதினர். இந்நிலையில், தற்போது விஜயபாஸ்கர் கலந்து கொண்ட கூட்டத்தில் ரகளை ஏற்பட்டுள்ளது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+