தமிழக அரசு-ஐஜி பொன்.மாணிக்கவேல் நடுவேயான மோதல் உச்சகட்டம்? சிபிஐ விசாரணை முடிவின் பின்னணி
Recommended Video

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான விசாரணையை, ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பல அதிரடி நடவடிக்கைகளும் நடந்தேறின. இந்த நிலையில் அரசுக்கும், விசாரணை குழுவிற்குமான மோதல் அதிகரித்துள்ளது.
கடத்தப்பட்ட, ராஜராஜசோழன் சிலையை குஜராத்தில் இருந்து மீட்டு வந்து அசத்தினார் பொன்.மாணிக்கவேல். ஆயினும் பொன் மாணிக்கவேல் மற்றும் தமிழக அரசு நடுவே, கடுமையான மோதல் போக்கு அதிகரித்து வந்தது.
பொன். மாணிக்கவேலை பணி இடமாற்றம் செய்ய தமிழக அரசு முயற்சித்தபோது அவர்தான் அந்த பணியிடத்தில் நீடிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் நீதிபதி மகாதேவன் உறுதியாக தெரிவித்து விட்டார்.

அதிரடி கைதுகள்
இருப்பினும் விடவில்லை தமிழக அரசு. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் தமிழக அரசால் பொன்மாணிக்கவேலுக்கு, எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் பொன்மாணிக்கவேல் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். முன்னாள் ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் ராஜா, கூடுதல் ஆணையர் கவிதா ஆகிய இந்து சமய அறநிலையத் துறையை சார்ந்த முக்கியஸ்தர்களை அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

பிடிக்கவில்லை
பொன். மாணிக்கவேலின் இந்த அதிரடி நடவடிக்கை, அரசில் இருக்கும் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. சிலை கடத்தல் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போதெல்லாம் அரசு மீது பொன்.மாணிக்கவேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார். இதுவும் அரசில் சிலருக்கு பிடிக்கவில்லையாம்.

கோர்ட்டிலேயே உரசல்
சிலைகளை பாதுகாக்க தனி அறையை ஏற்படுத்த வேண்டும் என்பது, உயர் நீதிமன்றம் உத்தரவு. ஆனால் அந்த உத்தரவை தமிழக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்பது பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு. நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது நீதிபதி முன்னிலையில் நேரடியாக இந்த மோதல்கள் அடிக்கடி வந்தன.

இரு நீதிபதிகள் பெஞ்ச்
இந்த நிலையில்தான் இன்று சிலை கடத்தல் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதிகளை கொண்ட சிறப்பு அமர்வு முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய இரு நீதிபதி சிறப்பு பெஞ்ச் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.

சிபிஐக்கு மாற்ற திடீர் முடிவு
இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு கூடுதல் வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐக்கு மாற்ற அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், அந்த கொள்கை முடிவை வருகிற 8ம் தேதி ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்தார். இவ்வாறு அரசு முடிவெடுக்க காரணம் என்ன என்று நீதிபதிகள் கேட்டபோது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்று அவர் தெரிவித்தார்.

விசாரணை அறிக்கை வெளியாகிறது
எந்த ஒரு விசாரணை அறிக்கையும் பொன்மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை குழு, தமிழக அரசிடம் தாக்கல் செய்யவில்லை, எனவே இந்த விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அவர் தெரிவித்தார். அப்படியானால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவையே, நீங்கள் கலைக்க போகிறீர்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுபற்றி அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த நிலையில்தான் வழக்கு விசாரணை வரும் எட்டாம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்று அரசின் கொள்கை முடிவு அறிவிக்கப்படும். அதேபோல பொன்.மாணிக்கவேல் குழுவின் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே விசாரணை அறிக்கையில் என்ன மாதிரி அம்சங்கள் இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications