இளங்கோவன் மனைவி பற்றி பேசிய நிருபர்-காங்கிரஸ் கட்சியினர் மோதல்! பிரஸ் மீட்டில் களேபரம்
சென்னை: "உங்கள் மனைவியை பார்த்து இப்படி யாராவது பேசினால் சும்மா இருப்பீர்களா" என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை பார்த்து கேள்வி கேட்ட நிருபர் ஒருவர், பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சத்யமூர்த்திபவனில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: யார் எனது கொடும்பாவிகளை எரிந்தார்களோ அவர்களை விட்டுவிட்டு, ஒன்றும் செய்யாத காங்கிரசாரை போலீசார் கைது செய்தது ஏன் தெரியவில்லை. கைது செய்த காங்கிரசாரை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
நிருபர் கேள்வி
இதையடுத்து நிருபர்கள் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது நிருபர் ஒருவர் ஜெயலலிதா-மோடி சந்தித்து தனிமையில் பேசியுள்ளனர். அதை பற்றி யாரும் தப்பாக நினைத்துவிட வேண்டாம் என்று பேசியுள்ளீர்களே இது தவறில்லையா என்று கேட்டார்.
தப்பில்லை
அதற்கு பதிலளித்த இளங்கோவன் "தவறாக நினைக்காதீர்கள் என்றால் என்ன அர்த்தம். தப்பாக நினைக்காதீர்கள் என்றுதான் அர்த்தம். நீங்கள் ஏன் தப்பாக நினைக்கிறீர்கள். சோனியா பற்றி ஜெயலலிதா என்னவெல்லாம் பேசினார் என்று தெரியுமா உங்களுக்கு" என்று இளங்கோவன் பதிலளித்தார்.
உங்கள் மனைவியாக இருந்தால்
அதற்கு அந்த நிருபர், நீங்கள் பேசிய ஆடியோ பதிவு உள்ளது என்று கூறினார். சத்தமாக அதை போட்டுக்காட்டுங்கள் என்று இளங்கோவன் பதிலுக்கு சவால் விடுத்தார். இதையடுத்து அந்த நிருபர் ஆடியோவை ஒலிபரப்ப ஆரம்பித்துக் கொண்டே, "இதேபோல உங்கள் மனைவியை யாராவது பேசினால் சும்மா இருப்பீர்களா" என்று இளங்கோவனை பார்த்து கேட்டார்.
நிருபர் வெளியேற்றம்
இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்களை அந்த நிருபரை தள்ளி இழுத்துச் சென்று வெளியே விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதன்பிறகு நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது: அமைதியாக நடைபெறும் நிருபர்கள் சந்திப்பில் குழப்பம் ஏற்படுத்த ஜெயாடிவியை சேர்ந்தவர்கள் திட்டம் போட்டு சதி செய்துள்ளனர். ஜெயாடிவி நிருபர், என் மனைவி எங்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி பேசியது தவறானது. என் மனைவி பற்றி பேச யாருக்கும் உரிமை கிடையாது.
இளங்கோவன் காட்டம்
ஜெயலலிதாவையும், சோபன் பாபுவையும் பற்றி நான் பேசவில்லையே. எந்த கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்வேன் என்று நிருபர்களுக்கு தெரியும். வேண்டுமென்றே கூச்சல் போட்டு குறும்பு வேலைகள் செய்தது ஜெயா டிவி நிருபரின் தப்பு. ஊடக தர்மம் பற்றி ஜெயா டிவி நிருபர் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்றார்.