கங்கையை சுத்தப்படுத்த ரூ.1058 கோடி செலவில் ஆறு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள்
சென்னை: சுத்தமான கங்கை என்ற தேசியத் திட்டத்திற்கான பணிகளை முடுக்கிவிடும் வகையில் முதல் கட்டமாக ஆறு புதிய சுத்திகரிப்பு தொழிற்சாலைகளை அமைக்க மத்திய அரசு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி இந்துக்களின் புனித நதியான கங்கையை சுத்தப்படுத்துவதை தனது முக்கிய லட்சியமாகத் தெரிவித்தார். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், உத்தர பிரதேசத்தில் உள்ள அலஹாபாத், பீகாரில் உள்ள பெயூர், கர்மலிசக், சைட்பூர் (பாட்னா) மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள பட்ஜ் பட்ஜ், பாரக்பூர் ஆகிய இடங்களில் 1058 கோடி பட்ஜெட்டில் இந்த சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்பட உள்ளன என்றார்.
நாளொன்றுக்கு 113 மில்லியன் கழிவு நீரை சுத்தப்படுத்தக்கூடிய இந்த ஆலைகளை கங்கை நதிக்கரை ஓரங்களில் அமைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் அமைச்சகம் கங்கையை சுத்தப்படுத்தும் பணிகளைத் துவக்கியுள்ளது.
இந்த சுத்திகரிப்பு பணிகளுக்காக திட்டமிடப்பட்டுள்ள பல செயலாக்க அறிக்கைகளை ஆய்வு செய்தபின்னர் இதற்கான மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த புதிய திட்டங்கள் நகரங்களில் இயங்கிவரும் கழிவுநீர் சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்க உதவும். இந்தத் திட்டங்களுக்கான 70 சதவிகித செலவை மத்திய அரசு ஏற்கும் என்று அவர் தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி மின்பற்றாக்குறை காரணமாக பல்வேறு மாநிலங்களில் இருக்கும் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள் சரிவர இயங்குவதில்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நிலை மாறவேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.