மதுக்கடைகளை மூடுங்கள்: மாவீரர் தினத்தில் ஆவேசப்பட்ட வைகோ!
சென்னை: தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடுங்கள் அதை விடுத்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடிப்பதும், சிவாஜி சிலையை அகற்றுவதும் ஏன் என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாவீரர் நாள் நினைவேந்தல் கூட்டம், வடசென்னை மாவட்டம் , தண்டையார்பேட்டை டிப்கோ அருகில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றினை எடுத்துரைத்தார். மேலும், மாவீரர் நினைவு தினத்தின் நோக்கம் குறித்து பேசினார்.

அப்போது அவர், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான மதுக்கடைகள் இருக்கின்றன. இவற்றினை குடித்துவிட்டு சாலைகளில் வாகனம் ஓட்டுபவர்களினால் எண்ணற்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன. குடித்து விட்டு ஓட்டுபவர்களினால் விபத்து ஏற்படுகிறதே தவிர சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளினால் அல்ல.
அதேபோல் நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் பூங்காவையும் இடித்துள்ளனர். இதனால் எண்ணற்றோரின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளது தமிழக அரசு.

எனவே மூடவேண்டியது மதுக்கடைகளைத்தான் என்றார்.
கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் நிர்வாகிகளும், கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் போல மேடை அமைக்கப்பட்டிருந்தது. இக் கூட்டத்தில் வடசென்னை மாவட்டடச் செயலாளர் சு.ஜீவன் நன்றி கூறினார்.

ஆண்டுதோறும் மாவீரர்நாள் நினைவேந்தல் கூட்டம் தென் சென்னையில் நடைபெறும். இந்த ஆண்டு வடசென்னைப் பகுதியான வண்ணாரப் பேட்டைப் பகுதியில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications